தமிழகத்தின் முக்கிய அடையாளங்களில் ஒன்றாக விளங்கும் விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் தேரின் சேதமடைந்த அலங்காரத் துணிகளை மாற்றும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. பக்தர்களின் தொடர் கோரிக்கையை தொடர்ந்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் ஆண்டுதோறும் ஆடி மாதத்தில் நடைபெறும் தேர்த்திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம். தமிழகத்தின் மிகப்பெரிய தேர்களில் ஒன்றாக கருதப்படும் ஆண்டாள் கோவில் தேர்த்திருவிழாவையொட்டி, விருதுநகர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறையும் அறிவிக்கப்படுவது வழக்கமாக உள்ளது.
இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த 6-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் வருகிற 14-ந்தேதி நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் கோவில் நிர்வாகம் சார்பில் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில், பிரம்மாண்ட தேரில் பயன்படுத்தப்பட்டு வந்த அலங்காரத் துணிகள் சில இடங்களில் சேதமடைந்தும், அவற்றின் நிறம் மங்கிய நிலையிலும் காணப்பட்டதாக பக்தர்கள் தெரிவித்தனர். தேரோட்டத்திற்கு முன்பாக பழைய அலங்காரத் துணிகளை மாற்றி, புதிய துணிகளை பயன்படுத்த வேண்டும் என பக்தர்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர்.
இதுதொடர்பாக சட்டமன்ற உறுப்பினர் கார்த்திக் மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளிடமும் பக்தர்கள் கோரிக்கை வைத்திருந்தனர். இதையடுத்து சேதமடைந்த அலங்காரத் துணிகளை மாற்ற அதிகாரிகள் உத்தரவிட்டதாக கூறப்படுகிறது.
அதன்படி, தற்போது தேரின் அலங்காரத் துணிகளை அகற்றி, புதிய துணிகளை பொருத்தும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இந்தப் பணிகளை ஸ்ரீவில்லிபுத்தூர் தமிழக வெற்றிக் கழக சட்டமன்ற உறுப்பினர் கார்த்திக் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
மேலும், புதிதாக பொருத்தப்படும் அலங்காரத் துணிகள் மீண்டும் சேதமடையாத வகையில் உரிய முறையில் பராமரித்து பாதுகாக்க வேண்டும் என்றும் அதிகாரிகளிடம் அவர் அறிவுறுத்தினார். தேரோட்டம் நெருங்கி வரும் நிலையில் அலங்காரப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதால் பக்தர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

