புகழ்பெற்ற அறுபடை வீடுகளில் ஐந்தாம் படை வீடான திருத்தணி அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில், ஆடிக்கிருத்திகை பெருவிழாவை முன்னிட்டு இன்று அதிகாலை முதலே லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்து சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், அண்டை மாநிலங்களில் இருந்தும் வருகை தந்துள்ள பக்தர்கள், மலையடிவாரத்தில் உள்ள சரவணப் பொய்கை தீர்த்தத்தில் புனித நீராடினர். தொடர்ந்து பால் காவடி, பன்னீர் காவடி, மலர் காவடி, மயில் காவடி எடுத்தும், அலகு குத்தியும் "அரோகரா" முழக்கமிட்டவாறு மலைக்கோயிலுக்குச் சென்று முருகப்பெருமானை வழிபாட்டு வருகின்றனர்.
ஆடிக்கிருத்திகையை முன்னிட்டு நடத்தப்படும் புகழ்பெற்ற மூன்று நாள் தெப்பத் திருவிழா இன்று மாலை கோலாகலமாகத் தொடங்குகிறது. இதனையொட்டி, மலைக்கோயிலில் இருந்து உற்சவர் வள்ளி, தெய்வானை சமேத முருகப்பெருமான் சிறப்பு அலங்காரத்தில் வீதியுலா வந்து, சரவணப் பொய்கையில் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கவுள்ளார். தொடர்ந்து அடுத்த இரு நாட்களும் தெப்ப உற்சவம் சிறப்பாக நடைபெறவுள்ளது.
விழாவினையொட்டி கோயில் வளாகம் முழுவதும் சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டுள்ளன. பக்தர்களின் வசதியைக் கருத்தில் கொண்டு விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள், குடிநீர் விநியோகம், மருத்துவ உதவி மையங்கள் மற்றும் சிறப்புப் போக்குவரத்து வசதிகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. பக்தர்களின் வருகை தொடர்ந்து அதிகரித்து வருவதால், திருக்கோயில் நிர்வாகமும் மாவட்ட நிர்வாகமும் இணைந்து உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளன.

