விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே விதிமுறைகளை மீறி அமைக்கப்படவுள்ள புதிய கல்குவாரிக்கு வழங்கப்பட்ட அனுமதியை உடனடியாக ரத்து செய்ய வலியுறுத்தி, கண்மாய்க்கரை பாதுகாப்பு இயக்கம் சார்பில் ஏராளமான கிராம மக்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அருப்புக்கோட்டை - திருச்சுழி தொகுதிக்கு உட்பட்ட மடத்துப்பட்டி - கல்லூரணி பாதையில் 'மஞ்சுளா அக்ரிகேட் சுப்புராம் கிரஷர் மற்றும் கல் குவாரி' என்ற பெயரில் புதிய குவாரி அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. சட்ட விதிகளுக்குப் புறம்பாகத் தொடங்கப்பட உள்ள இக்குவாரிக்கு வழங்கப்பட்ட அனுமதியை ரத்து செய்யக்கோரி, கண்மாய்க்கரை பாதுகாப்பு இயக்கத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் ரசல்ராஜ் தலைமையில் கல்லூரணியில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அரசு விதிமுறைகளின்படி, குவாரி அமையவுள்ள இடத்திலிருந்து 300 மீட்டர் சுற்றளவிற்குள் குடியிருப்புப் பகுதிகள், நீர்நிலைகள், ஓடைகள் அல்லது கால்நடை வளர்ப்புப் பகுதிகள் இருக்கக் கூடாது. ஆனால், தற்போது குவாரி அமையவுள்ள பகுதியில் 50-க்கும் மேற்பட்ட விவசாயக் குடும்பங்களின் வீடுகள், விவசாய நிலங்கள், முக்கியக் கண்மாய்கள் மற்றும் ஓடைகள் அமைந்துள்ளன. உள்ளூர் மக்களின் வீட்டு வரி ரசீதுகள் மற்றும் மின் கட்டண ஆதாரங்களைக் கணக்கில் கொள்ளாமல், மாசு கட்டுப்பாட்டு வாரியம் இக்குவாரிக்கு அனுமதி அளித்துள்ளதாகப் போராட்டக்காரர்கள் குற்றம்சாட்டினர்.
மேலும், இந்த விவகாரத்தில் முன்னாள் அமைச்சர்களின் அரசியல் அழுத்தம் இருப்பதாகவும், மாசு கட்டுப்பாட்டு வாரியம், மாவட்ட ஆட்சியர் மற்றும் கோட்டாட்சியர் ஆகியோர் தங்களது பொறுப்புகளைத் தட்டிக்கழித்து நாடகமாடுவதாகவும் அவர்கள் தெரிவித்தனர். அத்துடன், உள்ளூர் திமுக பிரமுகர் ஒருவர் நீர்நிலைகளை மூடி, சட்டவிரோதமாகச் சாலை அமைக்கும் பணிகளில் ஈடுபட்டு வருவதாகவும் சாடினர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் அப்பகுதி கிராம மக்கள், நாம் தமிழர் கட்சியினர் உட்பட ஏராளமானோர் கலந்துகொண்டு மாவட்ட நிர்வாகத்திற்கு எதிராகக் கண்டன முழக்கங்களை எழுப்பினர். மக்களின் வாழ்வாதாரத்தையும் சுற்றுச்சூழலையும் கருத்தில் கொண்டு, இக்கல் குவாரிக்கு அளிக்கப்பட்ட அனுமதியை மாவட்ட நிர்வாகம் உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர்.

