திருச்சி தெற்கு மாவட்ட தி.மு.க. சார்பில், முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞரின் 8-வது ஆண்டு நினைவு நாள் இன்று (ஆகஸ்ட் 7) மௌன அஞ்சலி ஊர்வலத்துடன் அனுசரிக்கப்பட்டது. திருச்சி அண்ணா ஸ்டேடியம் ரவுண்டானாவில் இருந்து தொடங்கிய ஊர்வலம், TVS டோல்கேட் பகுதியில் அமைந்துள்ள கலைஞரின் திருவுருவச் சிலையை சென்றடைந்தது. அங்கு திருச்சி தெற்கு மாவட்ட கழகச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான முனைவர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தலைமையில் கலைஞரின் சிலைக்கு மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டது.
இந்த நிகழ்வில் மாநகரக் கழகச் செயலாளர் மு. மதிவாணன், கழக செய்தித் தொடர்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கவிஞர் சல்மா, தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள் வண்ணை அரங்கநாதன், கே.என். சேகரன், பி.எம். சபியுல்லா, கழக இலக்கிய அணி புரவலர் எம். செந்தில், மாநகராட்சி துணை மேயர் டி. திவ்யா உள்ளிட்ட பல்வேறு நிர்வாகிகள் பங்கேற்று கலைஞருக்கு அஞ்சலி செலுத்தினர்.
மேலும் மாநில, மாவட்ட, மாநகர, ஒன்றிய, நகர, பேரூராட்சி, வட்ட, வார்டு மற்றும் கிளைக் கழக நிர்வாகிகள், தலைமைச் செயற்குழு மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள், பல்வேறு அணிகளின் அமைப்பாளர்கள், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் ஏராளமான தி.மு.க. தொண்டர்கள் கலந்து கொண்டு முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞரின் திருவுருவச் சிலைக்கு மலர்மாலை அணிவித்து புகழஞ்சலி செலுத்தினர்.

