நரிக்குடி ஒன்றியம் வீரசோழன் அரசு மேல்நிலைப் பள்ளியில் புதிதாகக் கட்டப்பட்ட கட்டிடத்தை உடனடியாகத் திறக்க வலியுறுத்தி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினருடன் இணைந்து கிராம பொதுமக்கள் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.
வீரசோழன் அரசு மேல்நிலைப் பள்ளியில் கூடுதல் வகுப்பறைகளுக்காகப் புதிய கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டு ஆறு மாதங்கள் கடந்துவிட்டன. இருப்பினும், இக்கட்டிடம் இதுவரை பயன்பாட்டிற்குத் திறக்கப்படாமல் பூட்டியே கிடைப்பதாகக் கூறப்படுகிறது. இதன் காரணமாக, மாணவர்கள் தொடர்ந்து பழைய மற்றும் அபாயகரமான கட்டிடத்திலேயே கல்வி பயிலும் சூழல் நிலவுகிறது.
இது அரசின் நிதி விரயத்திற்கு வழிவகுப்பதோடு மட்டுமல்லாமல், பயிலும் மாணவர்களின் உயிர் பாதுகாப்பிற்கும் அச்சுறுத்தலாக உள்ளது என அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டுகின்றனர். எனவே, மாணவர்களின் நலன் மற்றும் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, புதிய கட்டிடத்தை உடனடியாகத் திறந்து பயன்பாட்டிற்குக் கொண்டு வர வேண்டும் என அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் திருச்சுழி - நரிக்குடி ஒன்றியச் செயலாளர் செல்வம் தலைமையில் கிராம மக்கள் விருதுநகர் மாவட்ட ஆட்சியரைச் சந்தித்து மனு அளித்தனர். இந்த நிகழ்வின்போது, கட்சியின் ஒன்றியக் குழு உறுப்பினர் தங்கவேல், அனைத்திந்திய இளைஞர் பெருமன்ற ஒன்றியத் தலைவர் சரத், அழகுமலை மற்றும் பொதுமக்கள் பலர் உடனிருந்தனர்.

