சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயில் ஆடி அமாவாசைத் திருவிழா பாதுகாப்புப் பணிக்குச் சென்ற மண்டல துணை வட்டாட்சியரைக் காவலர் ஒருவர் தடுத்து நிறுத்திய சம்பவத்தைக் கண்டித்து, வத்திராயிருப்பு வட்டாட்சியர் அலுவலக வருவாய்த்துறை அலுவலர்கள் பணிப்புறக்கணிப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு வட்டாட்சியர் அலுவலகத்தில் மண்டல துணை வட்டாட்சியராகச் சசிகுமார் பணியாற்றி வருகிறார். வரும் 12-ஆம் தேதி சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில் ஆடி அமாவாசைத் திருவிழா நடைபெறவுள்ளதை முன்னிட்டு, வருவாய்த்துறை மற்றும் காவல்துறை சார்பில் ஒருங்கிணைந்த பணிகள் இன்று முதல் தொடங்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், சதுரகிரி கோயில் பணிக்குச் சென்ற துணை வட்டாட்சியர் சசிகுமாரைத் தற்காலிகப் பேருந்து நிலையம் அருகே உள்ள சோதனைச் சாவடியில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவலர் ஒருவர் உள்ளே செல்ல அனுமதிக்கவில்லை எனக் கூறப்படுகிறது. சசிகுமார் தனது அரசு அடையாள அட்டை மற்றும் கைபேசியில் இருந்த பணி உத்தரவு நகலையும் காண்பித்தும், அக்காவலர் அவரை உள்ளே செல்ல அனுமதிக்க மறுத்ததால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
மேலும், அப்போது துணை வட்டாட்சியர் கையில் வைத்திருந்த கைபேசியை அக்காவலர் கீழே தள்ளியதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இச்சம்பவத்தைக் கண்டித்தும், சம்பந்தப்பட்ட காவலர் மீது உடனடியாகத் துறைரீதியான நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் வத்திராயிருப்பு வட்டாட்சியர் அலுவலக நுழைவாயில் முன்பு வருவாய்த்துறை அலுவலர்கள் அனைவரும் திரண்டு காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தத் திடீர் பணிப்புறக்கணிப்புப் போராட்டம் காரணமாக, வட்டாட்சியர் அலுவலகத்தின் தினசரி பணிகளோடு, சதுரகிரி ஆடி அமாவாசைத் திருவிழாவிற்கான ஆயத்தப் பணிகளும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.

