மாநகராட்சி நிர்வாகத்தின் முயற்சிக்கு பொதுமக்கள் வரவேற்பு
விருதுநகர் மாவட்டம் சிவகாசியில், சுவரொட்டிகளால் பொலிவிழந்து காணப்பட்ட அரசுச் சுவர்களில், மறைந்து வரும் பாரம்பரிய பழக்கவழக்கங்கள் மற்றும் விளையாட்டுகளை நினைவுபடுத்தும் வகையில் தீட்டப்பட்டுள்ள வண்ணமிகு ஓவியங்கள் பொதுமக்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்து வருகின்றன.
சிவகாசி மாநகராட்சிக்கு உட்பட்ட பேருந்து நிலையம், மின்வாரிய அலுவலகம் மற்றும் மாநகராட்சி அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு அரசு சார்ந்த கட்டடச் சுவர்களில், கண்டபடி சுவரொட்டிகள் ஒட்டப்பட்டு வந்ததால் அச்சுவர்கள் தங்களது அழகை இழந்து காணப்பட்டன. பொது இடங்கள் பாழ்படுத்தப்படுவதைத் தடுக்கும் நோக்கில், மாநகராட்சி நிர்வாகம் சிறப்பு நடவடிக்கை மேற்கொண்டு அனைத்துப் பொதுச்சுவர்களிலும் எழில்மிகு ஓவியங்களை வரைந்து வருகிறது.
இன்றைய இளைய தலைமுறையினர் மறந்து வரும் பாரம்பரிய விளையாட்டுகள், கலாச்சாரப் பழக்கவழக்கங்கள் மற்றும் யோகாசன முறைகளை விவரிக்கும் வகையில் இந்த ஓவியங்கள் அமையப்பெற்றுள்ளன. மேலும், ஆபத்து மற்றும் அவசர தேவைகளின்போது தொடர்புகொள்ள ஏதுவாக, காவல் துறை, தீயணைப்புத் துறை, அரசு மருத்துவமனை, ரயில் நிலையம் மற்றும் தொழிலாளர் நலத்துறை உள்ளிட்ட முக்கியச் சேவைத் துறைகளின் அவசர உதவி தொலைபேசி எண்களும் சுவர்களில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளன. மாநகராட்சியின் இந்த விழிப்புணர்வு முயற்சிக்கு பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.

