விருதுநகர் பழைய பேருந்து நிலையம் முன்பு தமிழ்நாடு அரசு ஓய்வூதியர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கூட்டமைப்புச் செயலாளர் சிவபெருமாள் தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் 50-க்கும் மேற்பட்ட ஓய்வூதியர்கள் கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தில், தமிழகத்தில் பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன. குறிப்பாக, 70 வயதை நிறைவு செய்த ஓய்வூதியர்களுக்கு கூடுதலாக 10 சதவீத ஓய்வூதியம் வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
மேலும், குடும்ப பாதுகாப்பு நிதியை ரூ.1.50 லட்சமாக உயர்த்தி வழங்க வேண்டும் என்றும், ஒப்பந்த தொழிலாளர்களாக பணியாற்றிய காலத்தையும் கணக்கில் எடுத்துக்கொண்டு அவர்களுக்கு உரிய ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதியப் பலன்களை உடனடியாக வழங்க வேண்டும் என்றும் போராட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
பழைய ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் உள்ள சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஊழியர்களுக்கு குறைந்தபட்ச ஓய்வூதியமாக ரூ.7,850 வழங்க வேண்டும் என்பதும் போராட்டக்காரர்களின் முக்கிய கோரிக்கைகளில் ஒன்றாக இருந்தது.
இதுதவிர, ஓய்வூதியர்களின் பல்வேறு நலன்களை பாதுகாக்கும் வகையில் தமிழக அரசு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தி போராட்டத்தில் பங்கேற்றவர்கள் கண்டன முழக்கங்களை எழுப்பினர். இந்த ஆர்ப்பாட்டத்தால் விருதுநகர் பழைய பேருந்து நிலையம் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

