விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, மத்திய அரசுக்கு எதிராக முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்ட சிஐடியு (CITU) தொழிற்சங்கத்தைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்டோரை காவல்துறையினர் கைது செய்தனர்.
சிவகாசி பேருந்து நிலையம் முன்பாகத் திரண்ட சிஐடியு தொழிற்சங்கத்தினர், மத்திய அரசின் கொள்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்துக் கண்டன முழக்கங்களை எழுப்பினர். தொடர்ந்து, பேருந்து நிலையம் அருகே உள்ள 'பேங்க் ஆஃப் பரோடா' வங்கி கிளையை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
போராட்டத்தின் முக்கியக் கோரிக்கைகள்:
- 2025 நவம்பர் 21 அன்று அறிவிக்கப்பட்ட புதிய தொழிலாளர் நலச் சட்டங்கள் மற்றும் 2026 மே மாத விதிகளை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும்.
- அனைத்து விவசாய விளைபொருட்களுக்கும் குறைந்தபட்ச ஆதரவு விலையை (MSP) சட்டப்பூர்வமாக்கி, முழுமையான கொள்முதலை அரசே உறுதி செய்ய வேண்டும்.
- மின்சாரத் திருத்த மசோதா 2025-ஐ வாபஸ் பெற வேண்டும் மற்றும் மின்சாரத் துறையைத் தனியாருக்குத் தாரை வார்ப்பதை உடனடியாகக் கைவிட வேண்டும்.
- விபி-ஜி ராம்-ஜி சட்டத்தைக் கைவிட்டு, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தை மீண்டும் சீராகச் செயல்படுத்த வேண்டும்.
வங்கி முற்றுகைப் போராட்டத்தைத் தொடர்ந்து, அசம்பாவிதங்கள் ஏதும் ஏற்படாத வண்ணம் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர், போராட்டத்தில் ஈடுபட்ட நூற்றுக்கும் மேற்பட்டோரை கைது செய்து, அருகில் உள்ள தனியார் மண்டபத்தில் அடைத்து வைத்தனர்.

