பிரசித்தி பெற்ற சதுரகிரி சுந்தர மகாலிங்கம் திருக்கோவில் ஆடி அமாவாசை திருவிழாவை முன்னிட்டு, வரும் ஆகஸ்ட் 11 மற்றும் 12 ஆகிய இரண்டு தினங்களுக்கு வத்திராயிருப்பு மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் செயல்பட்டு வரும் 6 அரசு மதுபானக் கடைகள் மற்றும் பொழுதுபோக்குக் கூடங்களை (Recreation Clubs) தற்காலிகமாக மூட மாவட்ட ஆட்சித்தலைவர் சுகபுத்ரா உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பாக மாவட்ட நிர்வாகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:
தமிழ்நாடு மதுபான சில்லறை விற்பனை விதிகள் 2003-ன் விதி 12(1) மற்றும் 'தமிழ்நாடு மதுபான (உரிமம் மற்றும் அனுமதி) விதிகள் 1981'-ன் கீழ் வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தின்படி, சதுரகிரி சுந்தர மகாலிங்கம் திருக்கோவில் ஆடி அமாவாசை திருவிழாவை முன்னிட்டு சட்டம்-ஒழுங்கைப் பராமரிக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, ஆகஸ்ட் 11 (11.08.2026) மற்றும் ஆகஸ்ட் 12 (12.08.2026) ஆகிய தேதிகளில் பின்வரும் 6 நிறுவனங்கள் முழுமையாக மூடப்படும்:
- வத்திராயிருப்பு அரசு மதுபானக் கடை (எண்: 11872)
- மகாராஜாபுரம் அரசு மதுபானக் கடை (எண்: 12022)
- வத்திராயிருப்பு ஹர்சினி ரெக்ரேஷன் கிளப்
- ஜெயம் ரெக்ரேஷன் கிளப்
- மகாராஜாபுரம் குயின் ரெக்ரேஷன் கிளப்
- கூமாபட்டி அயோத்தி ரெக்ரேஷன் கிளப்
மேற்கண்ட F.L-1 மற்றும் F.L-2 உரிமம் பெற்ற மதுபானக் கடைகள் மற்றும் பார்களைக் குறிப்பிட்ட தினங்களில் திறக்கக் கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மாவட்ட ஆட்சியரின் இந்த உத்தரவை மீறிச் செயல்படும் டாஸ்மாக் நிறுவனப் பணியாளர்கள் மற்றும் மதுபான உரிம ஸ்தலங்களின் உரிமையாளர்கள் மீது 'தமிழ்நாடு மதுபான (உரிமம் மற்றும் அனுமதி) விதிகள் 1981'-ன் படி கடுமையான சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாவட்ட ஆட்சித்தலைவர் சுகபுத்ரா எச்சரித்துள்ளார்.

