பூக்குழி இறங்கி நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்!
நெல்லை மாவட்டம் பாபநாசம் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ள புகழ்பெற்ற காரையாறு சொரிமுத்து அய்யனார் திருக்கோயிலில், ஆடி அமாவாசை திருவிழா வெகுவிமர்சையாக நடைபெற்றது. கடந்த 3-ஆம் தேதி கொடியேற்றத்துடன் (கால்நடுதல்) தொடங்கிய இத்திருவிழாவின் முக்கிய நிகழ்வான ஆடி அமாவாசையை முன்னிட்டு, இன்று பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கோயிலில் குவிந்து சாமி தரிசனம் செய்தனர்.
விழாவின் சிகர நிகழ்ச்சியாக இரவு நேரத்தில் பூக்குழி இறங்கும் வைபவம் கோலாகலமாக நடைபெற்றது. முன்னதாக, சாமியாடிகள் சிலம்பம் சுற்றியும், கத்திச்சண்டையிட்டும் பக்தி பரவசத்துடன் ஆடிய நிகழ்வு பக்தர்களை மெய்சிலிர்க்க வைத்தது. இதனைத் தொடர்ந்து 200-க்கும் மேற்பட்ட பக்தர்கள் பூக்குழி இறங்கி தங்களது நேர்த்திக்கடனைச் செலுத்தினர். மேலும், சிலர் சங்கிலியால் தங்களது மார்பில் அடித்துக் கொண்டு தீவிர பக்தி சிரத்தையுடன் நேர்த்திக்கடன் நிறைவேற்றினர்.
ஆடி அமாவாசை திருவிழாவை முன்னிட்டு அசம்பாவிதங்கள் ஏதும் நடைபெறாமல் தடுக்கும் வகையில், காவல்துறையினரும் தீயணைப்புத் துறையினரும் இணைந்து பலத்த பாதுகாப்புப் பணிகளில் ஈடுபட்டிருந்தனர்.

