வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே உள்ள கிளித்தான்பட்டறை ஸ்ரீ சுந்தரியம்மன் கோயிலில், நூற்றாண்டு பழமை வாய்ந்த ஆடி வெள்ளி திருவிழா பக்தி பரவசத்துடன் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. வேண்டுதலை உடனடியாக நிறைவேற்றும் தெய்வமாக பக்தர்களால் நம்பப்படும் சுந்தரியம்மனை தரிசிக்க ஏராளமானோர் குவிந்தனர்.
விழாவை முன்னிட்டு காலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் மகா தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து மதியம் கூழ்வார்த்தல் நிகழ்வும், மாலையில் பக்தர்கள் பொங்கல் வைத்து, மாவிளக்கு ஏற்றி குடும்ப நலன் மற்றும் நேர்த்திக்கடன் நிறைவேற வேண்டி சிறப்பு வழிபாட்டில் ஈடுபட்டனர்.
விழாவின் முக்கிய நிகழ்வாக சுந்தரியம்மன் ஊஞ்சல் உற்சவம் நடைபெற்றது. மேளதாளம் முழங்க நடைபெற்ற இந்த நிகழ்வில் பக்தர்கள் குடும்பத்துடன் கலந்து கொண்டு அம்மனை தரிசித்து அருள்பெற்றனர்.
கோயில் நிர்வாகத்தின் தகவலின்படி, நாளை மாலை அம்மனுக்கு பால் அபிஷேகம், இரவில் பூப்பல்லக்கு திருவீதி உலா மற்றும் மஞ்சள் நீராட்டு விழா நடைபெற உள்ளது. விழா ஏற்பாடுகளை ஊர் தலைவர் விநாயகம் தலைமையில் கிராம மக்கள் செய்து வருகின்றனர்.
பக்தர்கள் கூறுகையில், “சுந்தரியம்மனிடம் மனமார வேண்டினால் வேண்டுதல்கள் விரைவில் நிறைவேறுகின்றன. அதனால் இப்பகுதி மட்டுமின்றி வெளியூர்களிலிருந்தும் ஏராளமானோர் வந்து பொங்கல் வைத்து வழிபடுகின்றனர்” என்றனர்.

