அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் அருகே முனையதிரையன்பட்டியில் அமைந்துள்ள அருள்மிகு மகா மாரியம்மன் கோயிலில் ஆடி மாத கடைசி ஞாயிற்றுக்கிழமையை முன்னிட்டு திரளான பக்தர்கள் பால்குடம் ஏந்தி நேர்த்திக்கடன் செலுத்தி சிறப்பு வழிபாட்டில் ஈடுபட்டனர்.
ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் இந்த பாரம்பரிய திருவிழாவில், சிறுவர்கள், பெண்கள் மற்றும் பெரியவர்கள் என நூற்றுக்கணக்கான பக்தர்கள் மஞ்சள் நிற ஆடைகள் அணிந்து ஏரிக்கரையில் இருந்து சக்தி கரகம் சூடி, அக்னிச்சட்டி, அலகு குத்தி காவடி மற்றும் பால்குடங்களுடன் மேளதாளம் முழங்க ஊர்வலமாக கோயிலை வந்தடைந்தனர்.
பம்பை மேளம் ஒலிக்க முக்கிய வீதிகள் வழியாக நடைபெற்ற ஊர்வலத்திற்குப் பிறகு, பக்தர்கள் அம்மனுக்கு பால் அபிஷேகம் செய்து வழிபட்டனர். தொடர்ந்து மலர்களால் அலங்கரிக்கப்பட்ட மகா மாரியம்மனுக்கு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
விழாவை முன்னிட்டு அன்னதானமும் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட பக்தர்கள் “ஓம் சக்தி… பராசக்தி” என்ற பக்தி முழக்கங்களுடன் அம்மனை தரிசித்து தங்களது வேண்டுதல்கள் நிறைவேற பிரார்த்தனை செய்தனர். ஊர் பொதுமக்கள் மற்றும் முக்கியஸ்தர்களும் திருவிழாவில் பங்கேற்றனர்.

