விடுதலைப் போராட்ட வீரர் ஒண்டிவீரனின் 255-ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு, தமிழக அரசு சார்பில் நெல்லை பாளையங்கோட்டையில் உள்ள ஒண்டிவீரன் மணிமண்டபத்தில் அவரது திருவுருவச் சிலைக்கு நிதி அமைச்சர் மரியவில்சன், பத்திரப்பதிவு மற்றும் வணிகவரித்துறை அமைச்சர் லோகேஷ் தமிழ்ச்செல்வன் ஆகியோர் கலந்து கொண்டு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதனைத் தொடர்ந்து பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் லோகேஷ் தமிழ்ச்செல்வன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் இந்திய சுதந்திரப் போராட்டத்தின் தொடக்க ஆண்டுகளில் ஆங்கிலேயர்களை எதிர்த்துப் போராடிய மாவீரர் ஒண்டிவீரனார் அவர்களின் நினைவு நாளான இன்று, தமிழக முதல்வர் அவர்களின் உத்தரவின் பேரில், திருநெல்வேலியில் அமைந்துள்ள அவரது மணிமண்டபத்திற்கு நானும் நிதித்துறை அமைச்சரும் நேரில் வந்து வீரவணக்கம் செலுத்தியுள்ளோம். அரசு சார்பில் இதில் பங்கேற்பதில் பெருமிதம் கொள்கிறேன். முதல்வர் அவர்கள் ஒடுக்கப்பட்ட சமூகங்களின் மீது மிகுந்த அக்கறை கொண்டவர். அதனால்தான் அச்சமூகங்களைச் சேர்ந்த 8 பேரை அமைச்சர்களாகவும், ஒருவரைத் துணை சபாநாயகராகவும் நியமித்துள்ளார். இந்த வீரவணக்க நாளில் என்னை அரசு சார்பில் அனுப்பி வைத்ததற்கு முதல்வருக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். நூலகம் அமைப்பதற்கான இடம் ஒதுக்கப்பட்டும், இதுவரை அதற்கான பணிகள் தொடங்கப்படாமல் உள்ளது , மேலும், தற்காலிகப் பணியாளர்களே நியமிக்கப்பட்டுள்ளனர். அரசு இதற்கு என்ன செய்யப்போகிறது என செய்தியாளர்கள் கேட்டதற்கு இந்த அரசு பொறுப்பேற்று 100 நாட்களே ஆகின்றன. முதல் முறையாக இந்த வீரவணக்க நிகழ்விற்கு வந்துள்ளேன். இப்பிரச்சனையை தற்போது எனது கவனத்திற்குக் கொண்டு வந்துள்ளீர்கள். இது குறித்து மாண்புமிகு முதலமைச்சரிடம் தெரிவித்து, நூலகப் பணிகள் மற்றும் தேவையான வசதிகளைச் செய்ய உரிய நடவடிக்கை எடுக்கப்படும், ஒடுக்கப்பட்ட சமூகங்களுக்கு 8 அமைச்சர் பதவிகளையும், துணை சபாநாயகர் பதவியையும் வழங்கிய அரசு இது. பொதுவாக, இச்சமூகத்தினருக்கு அமைச்சரவையில் இடம் கொடுத்தாலும் சிறிய துறைகளே ஒதுக்கப்படும். ஆனால், இந்த ஆட்சியில் பத்திரப்பதிவுத் துறை, செய்தி விளம்பரத் துறை, பள்ளி கல்வித் துறை, உயர் கல்வித் துறை போன்ற முக்கியப் பெருந்துறைகள் ஒடுக்கப்பட்ட சமூகங்களைச் சேர்ந்தவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. தற்போது வழங்கப்பட்டுள்ள 3% உள் இடஒதுக்கீடு இச்சமூகத்தின் மக்கள் தொகைக்குக் குறைவாக இருக்கலாம் என்ற நோக்கத்தில்தான், முதலமைச்சர் அவர்கள் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த உத்தரவிட்டுள்ளார். அந்தக் கணக்கெடுப்பின் முடிவுகள் வந்த பிறகு, இச்சமூகத்திற்குத் தேவையான உரிய இடஒதுக்கீடு முறைப்படி கிடைக்கும். பத்திரப் பதிவுத் துறையில் எவ்வித முறைகேடுகளும் நடைபெறவில்லை. பத்திரப்பதிவுத் துறையில் லஞ்சம் முற்றிலும் ஒழிக்கப்பட்டு வருகிறது. விரைவில் அது முழுமையாக ஒழிக்கப்படும் என தெரிவித்தார். தொடர்ந்து நிதியமைச்சர் மரியவில்சன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு புதிய கார்கள் மற்றும் படிகள் வழங்குவது மக்களின் வரிப்பணத்தை வீணடிக்கும் செயல் என எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுகின்றனவே என்ற கேள்விக்கு பதில் அளித்த அவர் உண்மையில் சட்டமன்ற உறுப்பினர்களுக்கான இந்த வசதி நீண்ட காலமாகவே நிலுவையில் இருந்தது முதலமைச்சர் இதனை அறிவித்துள்ளதால் சட்டமன்ற உறுப்பினர்களுக்குப் பணிகள் மேற்கொள்ள மிகவும் வசதியாக இருக்கும். மேலும், சட்டமன்றத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி உள்ளிட்ட பல்வேறு சட்டமன்ற உறுப்பினர்கள் முன்வைத்த கோரிக்கைகளை ஏற்றுக்கொண்டே முதலமைச்சர் இதனை அறிவித்துள்ளார் என்றார் தமிழ்நாட்டின் தற்போதைய பொருளாதார நிலை எவ்வாறு உள்ளது என்ற கேள்விக்கு மாநிலத்தின் பொருளாதார நிலை தொடர்ந்து மேம்பட்டு வருகிறது. வரும் நாட்களில் அரசு மேற்கொள்ளவிருக்கும் நிதிச் சீர்திருத்தங்களை நீங்களே காண்பீர்கள். நிதிச் சீர்திருத்தங்கள் மற்றும் ஜிடிபி குறித்த விவரங்களைச் சட்டமன்றத்திலேயே நான் தெளிவாக விளக்கியுள்ளேன். முதல் காலாண்டில் கடன்-ஜிடிபி விகிதத்தைக் குறைப்பதற்கும், வருவாய் வரவினக் கடன்களைக் குறைப்பதற்கும் உரிய நடவடிக்கைகள் தெளிவாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தாமிரபரணி பாதுகாப்புத் திட்டம் தொடர்பான அடுத்தகட்ட நடவடிக்கைகள் விரைவில் மேற்கொள்ளப்படும். நீர்வளத்துறை அமைச்சகம் இதன் பணிகளைக் கவனித்து வருகிறது. மேலும், என்னை இந்த மாவட்டத்திற்கான பொறுப்பு அமைச்சராகவும் முதல்வர் நியமித்துள்ளார். தாமிரபரணி ஆற்றைப் பாதுகாப்பது ஒரு நீண்ட காலப் பிரச்சனை என்பதால், கடந்த கால ஆட்சியாளர்களால் தீர்க்கப்படாத இப்பிரச்சனைக்குத் தற்போதைய அரசு உரிய திட்டங்கள் மூலம் விரைவில் ஒரு நிரந்தரத் தீர்வை வழங்கும் என கூறினார். இந்த நிகழ்வில் ஆட்சியர் ஆனந்த்மோகன், சட்டமன்ற உறுப்பினர்கள் ரெட்டியார்பட்டி நாராயணன், ஆர்.எஸ்.முருகன் மற்றும் அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
அரசியல்
ஒண்டிவீரன் 255-வது நினைவு தினம்: அமைச்சர்கள் மாலை அணிவித்து மரியாதை
🕒 20 ஆக., 2026, 07:21 AM
⏱️ 3 நிமிடம் வாசிப்பு

