போதைப்பொருள் இல்லாத தமிழ்நாட்டை உருவாக்கும் நோக்கில் மாநிலம் முழுவதும் பல்வேறு விழிப்புணர்வு மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, சென்னையில் போதைப்பொருள் ஒழிப்பு தொடர்பான மாநில அளவிலான உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
சென்னை மாநிலக் கல்லூரியில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் தமிழக முதல்-அமைச்சர் விஜய் பங்கேற்று, மாணவ-மாணவிகள் முன்னிலையில் போதைப்பொருள் ஒழிப்பு உறுதிமொழியை வாசித்தார்.
இதனைத் தொடர்ந்து, தமிழகத்தில் போதைப்பொருள் தடுப்பு மற்றும் கடத்தல் ஒழிப்பு நடவடிக்கைகளில் சிறப்பாக செயல்பட்ட காவல்துறை அதிகாரிகளை கவுரவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் திறம்பட பணியாற்றிய 15 காவல் துறை அதிகாரிகளுக்கு முதல்வர் விஜய் பதக்கங்களை வழங்கி பாராட்டினார்.
மேலும், தமிழகம் முழுவதும் போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருட்களை அழிக்கும் பணிகளும் முதல்வர் விஜய் முன்னிலையில் தொடங்கி வைக்கப்பட்டன.
செங்கல்பட்டு, திருநெல்வேலி, கோவை மற்றும் தஞ்சாவூர் உள்ளிட்ட பகுதிகளில் பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருட்களை அழிக்கும் பணிகளை முதல்வர் விஜய் காணொலி வாயிலாக பார்வையிட்டார்.
போதைப்பொருள் பயன்பாட்டை கட்டுப்படுத்துவதுடன், இளைஞர்கள் மற்றும் மாணவர்களிடையே போதைப்பொருளுக்கு எதிரான விழிப்புணர்வை ஏற்படுத்தும் நடவடிக்கைகளும் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

