விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே உள்ள மகாராஜபுரம் ஊராட்சியில் கடந்த 25 நாட்களுக்கும் மேலாக குடிநீர் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளதால், அப்பகுதி பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
மகாராஜபுரம் ஊராட்சிக்குட்பட்ட அண்ணாநகர் பகுதியில் 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இப்பகுதி மக்களின் அன்றாட அத்தியாவசியத் தேவைகளுக்காக ஊராட்சி நிர்வாகம் சார்பில் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வந்தது. இந்த நிலையில், கடந்த 25 நாட்களுக்கும் மேலாக இங்கு சீரான குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை என்று கூறப்படுகிறது.
இதன் காரணமாக, அப்பகுதி மக்கள் குடிநீருக்காக நீண்ட தூரம் நடந்து சென்று, பிற பகுதிகளில் இருந்து தண்ணீர் எடுத்து வரும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து ஊராட்சி மன்ற அலுவலகத்தில் பலமுறை புகார் அளித்தும், இதுவரை எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
எனவே, பொதுமக்களின் அத்தியாவசியத் தேவையைக் கருத்தில் கொண்டு, உடனடியாக சீரான குடிநீர் விநியோகத்தை உறுதி செய்ய ஊராட்சி நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

