விருதுநகர் அருகே உள்ள பாவாலி ஊராட்சியில், மயானத்திற்குச் செல்லும் பாதை மற்றும் அடிப்படை வசதிகளை உடனடியாக ஏற்படுத்தித் தரக் கோரி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் கிராம நிர்வாக அலுவலகம் முற்றுகையிடப்பட்டு போராட்டம் நடைபெற்றது.
பாவாலி ஊராட்சியில் பட்டியலின சமூகத்தினருக்கென உள்ள மயானங்களுக்கு, உயிரிழந்தவர்களின் உடல்களை எடுத்துச் செல்வதற்குச் சரியான வழிப்பாதை இல்லை. இதனால், விவசாய நிலங்களில் பயிர்களுக்கு நடுவே சடலங்களைச் சுமந்து செல்ல வேண்டிய அவல நிலை நீடித்து வருகிறது. மேலும், அங்குள்ள மயான எரிமேடை சேதமடைந்து இடிந்து விழும் நிலையில் உள்ளதால், ஆபத்தான சூழலில் வெளிப்புறத்திலேயே உடல்களை எரியூட்டி வருகின்றனர்.
எனவே, மயானத்திற்குச் செல்லும் பாதையைச் சீரமைத்துத் தருவதோடு, மின்சாரம் மற்றும் குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை ஏற்படுத்தித் தரக் கோரி, மாவட்ட நிர்வாகத்திற்கும் ஊராட்சி நிர்வாகத்திற்கும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மற்றும் பொதுமக்கள் சார்பில் பலமுறை மனுக்கள் அளித்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது.
இதனைக் கண்டித்து, விசிக வடக்கு ஒன்றியப் பொருளாளர் ராஜ்குமார் தலைமையில் பொதுமக்கள் பாவாலி கிராம நிர்வாக அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்து வந்த வருவாய்த்துறை அதிகாரிகளும் ஆமத்தூர் காவல்துறையினரும் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது, மயானத்திற்கான பாதை மற்றும் அடிப்படை வசதிகள் விரைவாகச் செய்து தரப்படும் என அதிகாரிகள் உறுதியளித்ததைத் தொடர்ந்து, கட்சியினரும் பொதுமக்களும் போராட்டத்தைக் கைவிட்டு அமைதியாகக் கலைந்து சென்றனர்.

