விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு கீழ ரத வீதியில் அமைந்துள்ள மாரியம்மன் கோவிலில், வரலட்சுமி நோன்பை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர்.
விழாவையொட்டி அம்மனுக்கு 18 வகையான சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டு, தொடர்ந்து வளையல் அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அம்மனுக்கு நவதானியங்கள் சாத்தப்பட்டு சிறப்பு பூஜைகளும் நடைபெற்றன.
இதன் ஒரு பகுதியாக, கோவிலுக்கு வந்த கர்ப்பிணி பெண்கள் மற்றும் குழந்தை வரம் வேண்டி வழிபட்ட பெண்கள் சிறப்பு பூஜையில் பங்கேற்றனர். அவர்களுக்கு கோவில் சார்பில் வளைகாப்பு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. அம்மனுக்கு சாத்தப்பட்ட நவதானியங்கள் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டன.
தொடர்ந்து பூஜையில் பங்கேற்ற பெண்களுக்கு வளையல்கள் மற்றும் அன்னதானப் பிரசாதம் வழங்கப்பட்டது. வரலட்சுமி நோன்பையொட்டி நடைபெற்ற சிறப்பு வழிபாட்டில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.

