விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள பிரசித்தி பெற்ற இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில், பக்தருக்கு உதவுவது போல் நடித்து பையிலிருந்த தங்கச் சங்கிலியைத் திருடிய பெண்ணை காவல்துறையினர் கைது செய்தனர்.
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகேயுள்ள ஒத்தையால் கிராமத்தைச் சேர்ந்தவர் சுந்தரராஜ். இவர் தனது மனைவி அபிராமியுடன் கடந்த 1-ஆம் தேதி இருக்கன்குடி மாரியம்மன் கோவிலுக்குச் சாமி தரிசனம் செய்யச் சென்றுள்ளார். அப்போது, அபிராமி வைத்திருந்த கைப்பையை அருகில் இருந்த பெண் ஒருவர் பார்த்துக்கொள்வதாகக் கூறியுள்ளார். அதை நம்பிய அபிராமி, பையைக் கொடுத்துவிட்டு அருகில் உள்ள கடைக்குச் சென்றுள்ளார்.
சிறிது நேரத்திற்குப் பிறகு பையைப் பெற்றுக்கொண்டு இருவரும் வீட்டிற்குத் திரும்பியுள்ளனர். வீட்டிற்குச் சென்று பார்த்தபோது, பையில் வைக்கப்பட்டிருந்த 6 கிராம் தங்கச் சங்கிலி மாயமாகியிருப்பது கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து சுந்தரராஜ் இருக்கன்குடி காவல் நிலையத்தில் உடனடியாகப் புகார் அளித்தார்.
புகாரின்பேரில் வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர், கோவில் வளாகத்தில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி (CCTV) கேமரா காட்சிகளை ஆய்வு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில், வியாழக்கிழமையன்று அதே பெண் மீண்டும் கோவிலுக்கு வந்தபோது, அவரைச் சந்தேகத்தின் அடிப்படையில் பிடித்துக் காவல்துறையினர் விசாரணை நடத்தினர்.
விசாரணையில், அவர் சிவகாசி போஸ் காலனியைச் சேர்ந்த பேச்சியம்மாள் (45) என்பதும், கடந்த 1-ஆம் தேதி அபிராமிக்கு உதவி செய்வது போல நடித்து அவரது பையிலிருந்த 6 கிராம் தங்கச் சங்கிலியைத் திருடிச் சென்றதும் உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, பேச்சியம்மாளைக் கைது செய்த காவல்துறையினர், அவரிடமிருந்த தங்கச் சங்கிலியையும் பறிமுதல் செய்தனர்.

