விருதுநகர் மாவட்டம், திருவில்லிபுத்தூர் வட்டாரப் பகுதிகளில் 'சிறப்பு பகுதி மேம்பாட்டு திட்டத்தின்' (SADP) கீழ் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளை, மாவட்ட ஆட்சியர் சுகபுத்ரா தலைமையில், திட்ட இயக்குநர் செல்வி கே.சங்கீதா இ.ஆ.ப., நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
ஆய்வுக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய சிறப்புப் பகுதி மேம்பாட்டுத் திட்ட இயக்குநர் கே.சங்கீதா, "விருதுநகர் மாவட்டத்தில் இராஜபாளையம், திருவில்லிபுத்தூர் மற்றும் வத்திராயிருப்பு வட்டாரப் பகுதிகளில் இத்திட்டத்தின்கீழ் மொத்தம் ஒதுக்கீடு செய்யப்பட்ட ரூ.11.38 கோடி மதிப்பிலான 40 திட்டப்பணிகளில், இதுவரை ரூ.8.16 கோடி மதிப்பிலான 34 பணிகள் வெற்றிகரமாக முடிவடைந்துள்ளன" என்று தெரிவித்தார்.
திட்டப் பணிகளின் விவரங்கள் குறித்து அவர் மேலும் கூறுகையில், "2023-24ஆம் நிதியாண்டில் ரூ.1.51 கோடி மதிப்பில் மேற்கொள்ளப்பட்ட 3 பணிகளும் முழுமையாக நிறைவு பெற்றுள்ளன. 2024-25ஆம் நிதியாண்டில் ரூ.7.22 கோடி மதிப்பிலான 34 பணிகளில் 29 பணிகளும், 2025-26ஆம் நிதியாண்டில் ஒதுக்கீடு செய்யப்பட்ட ரூ.2.65 கோடி மதிப்பிலான 3 பணிகளில் 2 பணிகளும் முடிக்கப்பட்டுள்ளன. எஞ்சியுள்ள பணிகளையும் விரைந்து முடித்து மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன" என்றார்.
இந்த ஆய்வின்போது, விழுப்பனூர் ஊராட்சியில் ரூ.37.83 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள தடுப்பணைகள் மற்றும் அத்திக்குளம்-செங்குளம் கிராமத்தில் ரூ.20 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள அங்கன்வாடி மையம் ஆகியவற்றை அதிகாரிகள் நேரில் பார்வையிட்டனர். அரசு விதிமுறைகளுக்கு உட்பட்டு பணிகள் தரமாக நடைபெறுகின்றனவா என்பதை ஆய்வு செய்த இயக்குநர், நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவுக்குள் பணிகளைத் தரத்துடன் முடித்து, பொதுமக்களின் பயன்பாட்டிற்கு வழங்கிட வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
தமிழ்நாட்டில் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளான உதகமண்டலம், கோயம்புத்தூர், ஈரோடு, திருப்பூர், திண்டுக்கல், மதுரை, தேனி, விருதுநகர், திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மலைப்பாங்கான மற்றும் பின்தங்கிய பகுதிகளில் மண் அரிப்பைத் தடுத்தல், நீர் வளத்தைப் பெருக்குதல், முழுமையான நீர் மேலாண்மை, சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் சமுதாயக் கூடங்கள், அங்கன்வாடி மையங்கள் உள்ளிட்ட பொதுக் கட்டிடங்கள் வாயிலாக மக்களின் வாழ்விடங்களை மேம்படுத்துவதே இத்திட்டத்தின் முதன்மை நோக்கமாகும்.
இந்த ஆய்வின் போது, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் திருமதி வானதி, மதுரை சிறப்பு பகுதி மேம்பாட்டுத் திட்ட வேளாண்மை பொறியியல் துறை செயற்பொறியாளர் திரு.ரமேஷ்குமார், திருவில்லிபுத்தூர் வட்டாட்சியர் திரு.அருளானந்தம் மற்றும் அரசுத் துறை பொறியாளர்கள், அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.

