விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்திற்குப் பேருந்து மூலம் கடத்தி வரப்பட்ட, பல லட்சம் ரூபாய் மதிப்பிலான 12 கிலோ கஞ்சாவை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். இச்சம்பவம் தொடர்பாகச் சுமைதூக்கும் தொழிலாளி (லோடுமேன்) ஒருவரைக் கைது செய்து சிறையிலடைத்துள்ளனர்.
தமிழக அரசால் தடை செய்யப்பட்ட கஞ்சா, ராஜபாளையத்திற்குப் பேருந்து மூலமாக சட்டவிரோதமாகக் கடத்தி வரப்படுவதாக வடக்கு காவல் நிலைய போலீஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இந்தத் தகவலின் அடிப்படையில், டி.பி. மில்ஸ் சாலையில் உள்ள பேருந்து நிறுத்தம் அருகே காவல்துறையினர் தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனர்.
அப்போது, பேருந்திலிருந்து சந்தேகத்திற்குரிய வகையில் பெரிய மூட்டையுடன் இறங்கிய நபர் ஒருவரைப் பிடித்துப் போலீஸார் விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர் செவல்பட்டி தெருவைச் சேர்ந்த சுமைதூக்கும் தொழிலாளியான சர்க்கரை ராஜ் என்பது தெரியவந்தது.
அவரிடமிருந்த மூட்டையைச் சோதனையிட்டதில், அதில் பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள 12 கிலோ கஞ்சா பொட்டலங்கள் இருப்பது கண்டறியப்பட்டு, அவை உடனடியாகப் பறிமுதல் செய்யப்பட்டன. இக்கடத்தல் சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த வடக்கு காவல்துறையினர், சர்க்கரை ராஜை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

