விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே டாஸ்மாக் கடையை அகற்றக் கோரி பொதுமக்கள் போராட்டம்; சாலை மறியலில் ஈடுபட முயன்றனர்* விருதுநகர் மாவட்டம், சிவகாசி ஒத்தப்புளி விலக்கு அருகே உள்ள அய்யம்பட்டி கிராமத்தில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் மதுபானக் கடையை உடனடியாக அகற்றக் கோரி அப்பகுதி பொதுமக்கள் திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வருவாய்த் துறையினர் மற்றும் காவல்துறையினர் போராட்டத்தில் ஈடுபட முயன்ற பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அவர்களின் கோரிக்கைகள் குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதியளித்ததைத் தொடர்ந்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு அமைதியாக கலைந்து சென்றனர். அய்யம்பட்டி கிராமம் வழியாக தினமும் பள்ளி, கல்லூரி மாணவர்கள், பெண்கள் மற்றும் பொதுமக்கள் அதிக அளவில் சென்று வருவதாக கூறிய கிராம மக்கள், டாஸ்மாக் கடைக்கு வரும் சிலர் மது அருந்திவிட்டு அதிவேகமாக இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களை இயக்குவதால் அந்த பகுதியில் அடிக்கடி சாலை விபத்துகள் ஏற்படுவதாக குற்றம்சாட்டினர். மேலும், மது அருந்தியவர்களின் அத்துமீறிய நடத்தை காரணமாக பெண்கள், மாணவிகள் மற்றும் பொதுமக்கள் அச்சத்துடன் நடமாட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும், சட்டம்-ஒழுங்கு பிரச்சினைகள் உருவாகும் அபாயம் இருப்பதாகவும் அவர்கள் தெரிவித்தனர். எனவே, பொதுமக்களின் உயிர் பாதுகாப்பையும், பெண்களின் பாதுகாப்பையும் கருத்தில் கொண்டு அய்யம்பட்டி பகுதியில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் மதுபானக் கடையை உடனடியாக வேறு இடத்திற்கு மாற்றவோ அல்லது நிரந்தரமாக அகற்றவோ மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கிராம மக்கள் வலியுறுத்தினர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பான சூழல் நிலவியது.
செய்திகள்
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே டாஸ்மாக் கடையை அகற்றக் கோரி பொதுமக்கள் போராட்டம்; சாலை மறியலில் ஈடுபட முயன்றனர்
The News Outlook
🕒 10 ஜூலை, 2026, 03:06 PM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு

செய்தியைக் கேளுங்கள்
Text-to-Speech
