விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே திருவண்ணாமலை ஊராட்சிக்கு உட்பட்ட
என்.சண்முகசுந்தராபுரம் கிராம பகுதியில் சுமார் 300-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.இந்த கிராமப் பகுதியில் சாலை வசதி,குடிநீர் வசதி,மயானக்கரை வசதி,பள்ளி குழந்தைகளுக்கு செல்லும் பாதை வசதி, வாறுகால் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாமல் தவித்து வருவதாகவும் இதுகுறித்து பலமுறை அரசு அதிகாரிகளிடம் ஆறு ஆண்டுகளாக தெரிவித்தும் பல்வேறு போராட்டங்கள் நடத்தியும் இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கிராம மக்கள் புகார் தெரிவிக்கின்றனர். இந்நிலையில் இன்று 80 -வது ஆண்டு சுதந்திர தின விழாவை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் கிராம சபை கூட்டம் நடைபெற்று வரும் நிலையில் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே திருவண்ணாமலை ஊராட்சிக்கு உட்பட்ட கிராம பகுதிகளில் அடிப்படை வசதிகள் வேண்டி கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு அதிகாரிகள் முன்பு தீர்மானம் நிறைவேற்றும் கிராம சபை கூட்டத்தில் என்.சண்முகசுந்தராபுரம் கிராம மக்கள் அடிப்படை வசதிகள் இல்லாமல் அவதிக்குள்ளாகி வருவதாகவும் தொடர்ந்து புகார்கள் அளித்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என குற்றம் சாட்டி தங்கள் கிராம மக்களை கருணை கொலை செய்ய வேண்டுமென கோரிக்கை வைத்தனர். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.உடனடியாக என்.சண்முகசுந்தராபுரம் கிராமப் பகுதியில் அனைத்து அடிப்படை வசதிகளும் செய்து தர வேண்டும் என மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை எழுந்துள்ளது.

