தமிழக அரசு டாஸ்மாக் பணியாளர் சங்கம் மற்றும் 12 தொழிற்சங்கங்கள் இணைந்து, ஆகஸ்ட் 28 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக மாநில பொதுச் செயலாளர் ராஜா அறிவித்துள்ளார். இந்தப் போராட்டத்தில் தமிழகம் முழுவதும் சுமார் 23,000 டாஸ்மாக் ஊழியர்கள் பங்கேற்பார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.
33 கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம்
தமிழ்நாடு மாநில வாணிபக் கழகம் (TASMAC) மூலம் இயங்கும் அரசு மதுபான சில்லறை விற்பனை கடைகளில் பணியாற்றும் ஊழியர்களின் நீண்டநாள் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தியே இந்த வேலைநிறுத்தம் நடைபெறுகிறது.
செய்தியாளர்களிடம் பேசிய ராஜா, 23 ஆண்டுகளாக பணியாற்றும் ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும், காலமுறை ஊதியம், ஓய்வூதியம், பணியில் உயிரிழக்கும் ஊழியர்களின் குடும்பத்தினருக்கு கருணை அடிப்படையிலான அரசு வேலை, காலி மதுபாட்டில்களை திரும்பப் பெறும் திணிப்பை ரத்து செய்தல், சுழற்சி முறை பணியிட மாற்றத்தில் திருத்தம் உள்ளிட்ட 33 கோரிக்கைகள் அரசால் உடனடியாக நிறைவேற்றப்பட வேண்டும் என்றார்.
“மாற்றம் என வந்த அரசும் ஏமாற்றுகிறது” – ராஜா
மேலும் அவர், கடந்த ஆட்சியாளர்களும் டாஸ்மாக் ஊழியர்களின் பிரச்சினைகளை தீர்க்கவில்லை என்றும், “மாற்றம் என வந்த அரசும் டாஸ்மாக் ஊழியர்களை ஏமாற்றி வருகிறது” என குற்றம்சாட்டினார்.
மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறைக்கான மானியக் கோரிக்கை சட்டமன்றத்தில் எடுத்துக் கொள்ளப்படுவதற்கு முன்பாகவே தொழிலாளர்களின் கோரிக்கைகளை அரசு பரிசீலித்து நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

