விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே சட்டவிரோதமாக ஆழ்துளைக் கிணறு அமைத்து, தினமும் லட்சக்கணக்கான லிட்டர் நிலத்தடி நீர் திருடப்பட்டு வணிக நோக்கில் விற்பனை செய்யப்பட்டு வருவதாகப் பரபரப்பு புகார் எழுந்துள்ளது. இது தொடர்பாக நீர்வளத் துறை அறிக்கை சமர்ப்பித்தும், மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்காமல் காலம் தாழ்த்தி வருவதாகச் சமூக ஆர்வலர் குற்றம் சாட்டியுள்ளார்.
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேயுள்ள பழைய செந்நல்குளத்தைச் சேர்ந்த குமாரசாமி என்பவர், எஸ். திருவேங்கடபுரம் வடக்குத் தெருவில் உள்ள தனது சொந்த நிலத்தில் ஆழ்துளைக் கிணறு அமைத்துள்ளார். அங்கிருந்து பெறப்படும் லட்சக்கணக்கான லிட்டர் தண்ணீரை, வணிக நோக்கில் தினமும் டிராக்டர்கள் மற்றும் லாரிகள் மூலம் பல்லாயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்து வருகிறார்.
ஏற்கெனவே இப்பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாகக் குறைந்துள்ளதால், ஆண்டுக்கு சுமார் 6 மாதங்கள் கடுமையான வறட்சி நிலவி வருகிறது. இத்தகையச் சூழலில், சட்டவிரோதமாகத் தண்ணீர் உறிஞ்சப்பட்டு விற்பனை செய்யப்படுவதால் மேலும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது. இதைக் கட்டுப்படுத்தக் கோரி, அப்பகுதியைச் சேர்ந்த சமூக ஆர்வலர் ராஜு என்பவர் வருவாய்த் துறையினருக்கும் மாவட்ட ஆட்சியருக்கும் புகார் அளித்தார்.
எனினும், அதிகாரிகளின் தரப்பில் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாததால், அவர் நேரடியாக நீர்வளத் துறை அமைச்சகத்திற்குப் புகார் அனுப்பினார். அந்தப் புகாரின் அடிப்படையில், காரைக்குடி நிலநீர் கோட்ட செயற்பொறியாளர் தலைமையிலான அதிகாரிகள் கள ஆய்வு மேற்கொண்டனர். அதில், அனுமதியின்றிச் சட்டவிரோதமாகத் தண்ணீர் விற்பனை செய்யப்படுவது உண்மைதான் என்பது உறுதி செய்யப்பட்டது.
இது தொடர்பான பதில் மனு கடந்த மாதம் 24-ஆம் தேதி சமூக ஆர்வலர் ராஜுவுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அந்த மனுவில், "மாவட்ட ஆட்சியர் தலைமையிலான கண்காணிப்புக் குழு மூலம் சட்டவிரோத நீர் விற்பனை தடை செய்யப்படும் என்றும், சம்பந்தப்பட்ட ஆழ்துளைக் கிணறை மூடி சீல் வைக்க நடவடிக்கை பரிந்துரைக்கப்படும்" என்றும் தெரிவிக்கப்பட்டது.
ஆனால், இந்த அதிகாரப்பூர்வக் கடிதம் கிடைத்து ஒரு மாதத்திற்கு மேலாகியும், எவ்வித தடையுமின்றி சட்டவிரோதத் தண்ணீர் விற்பனை தொடர்ந்து நடைபெற்று வருவதாக ராஜு வேதனை தெரிவித்துள்ளார்.
சட்டவிரோத நிலத்தடி நீர் விற்பனை குற்றச் செயல் என சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை திட்டவட்டமாகத் தெரிவித்துள்ள நிலையிலும், நீதிமன்றத்தின் உத்தரவையும் நீர்வளத் துறையின் அறிக்கையையும் மாவட்ட ஆட்சியரும் வட்டாட்சியரும் மதிக்காமல் செயல்படுவதாக அவர் குற்றம் சாட்டினார். மேலும், இதுகுறித்து ஸ்ரீவில்லிபுத்தூர் சட்டமன்ற உறுப்பினர் கார்த்திக்கிடம் தொலைபேசி வாயிலாகத் தகவல் தெரிவித்தும், அவரிடமிருந்து உரிய பதில் எதுவும் வரவில்லை எனக் கூறப்படுகிறது.
எனவே, உயர் நீதிமன்ற உத்தரவை நடைமுறைப்படுத்தாமல் அலட்சியமாகச் செயல்படும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் மீது தமிழக அரசு உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனச் சமூக ஆர்வலர் ராஜு கோரிக்கை விடுத்துள்ளார்.

