விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே, மதுரை–கொல்லம் நான்கு வழிச்சாலையில் டயர் வெடித்ததால் மீன் ஏற்றிச் சென்ற லாரி கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்தது. இந்த விபத்தில் 600 கிலோ மீன்கள் சாலையில் சிதறி வீணான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
தென்காசி மாவட்டம் சிவகிரி அருகேயுள்ள தென்மலை கிராம கண்மாயில் பிடிக்கப்பட்ட 600 கிலோ மீன்கள், அசோக் லேலண்ட் 407 ரக சரக்கு வாகனத்தில் தஞ்சாவூருக்கு கொண்டு செல்லப்பட்டன. லாரியை தென்மலையைச் சேர்ந்த முருகன் ஓட்டி வந்தார்.
இரவு சுமார் 10 மணியளவில், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கீழப்பொட்டல்பட்டி மேம்பாலம் பகுதியில் சென்றபோது லாரியின் டயர் திடீரென வெடித்தது. இதனால் கட்டுப்பாட்டை இழந்த வாகனம் சென்டர் மீடியனில் மோதி கவிழ்ந்தது.
விபத்தில் ஓட்டுநர் முருகன் சிறிய காயங்களுடன் உயிர்தப்பினார். ஆனால் லாரியில் இருந்த 600 கிலோ மீன்கள் சாலையில் சிதறி சேதமடைந்ததால் பெரும் பொருளாதார இழப்பு ஏற்பட்டது.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஸ்ரீவில்லிபுத்தூர் தாலுகா போலீசார் மற்றும் நெடுஞ்சாலை ரோந்து போலீசார் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தி, கவிழ்ந்த லாரியை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். இதனால் மதுரை–கொல்லம் நான்கு வழிச்சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
முக்கிய அம்சங்கள்
- ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே டயர் வெடித்து மீன் லாரி கவிழ்ந்தது
- 600 கிலோ மீன்கள் சாலையில் சிதறி வீணானது
- ஓட்டுநர் சிறு காயங்களுடன் உயிர்தப்பினார்
- கீழப்பொட்டல்பட்டி மேம்பாலம் பகுதியில் போக்குவரத்து பாதிப்பு

