விருதுநகர் மாவட்டம், சிவகாசி வட்டாட்சியர் அலுவலகத்திற்கு மனு அளிக்க வரும் பொதுமக்கள் பணமோ அல்லது பரிசுப் பொருட்களோ கொண்டு வரக் கூடாது என்றும், தடையை மீறினால் காவல்துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை அறிவிப்புப் பலகை ஒட்டப்பட்டுள்ளது.
சிவகாசி வட்டாட்சியர் அலுவலகத்திற்குத் தங்கள் கோரிக்கை தொடர்பான மனுக்களைச் சமர்ப்பிக்கவும், ஏற்கனவே அளிக்கப்பட்ட கோப்புகளின் நிலை குறித்து அறிந்து கொள்ளவும் தினமும் ஏராளமான பொதுமக்கள் வந்து செல்கின்றனர். இந்நிலையில்தான், வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் இந்த புதிய அறிவிப்பு நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது.
அந்த அறிவிப்பில், "பொதுமக்கள் தங்கள் மனுக்கள் தொடர்பாக வட்டாட்சியர் அலுவலகத்திற்கு வரும்போது கண்டிப்பாகப் பணமோ, பரிசுப் பொருட்களோ கொண்டு வரக் கூடாது. மீறிப் பணம் அல்லது பொருட்களை யாரேனும் கொண்டு வந்தால், அவர்கள் மீது காவல்துறை மூலம் சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசு அலுவலகங்களில் லஞ்சத்தைத் தடுக்கும் வகையிலும், வெளிப்படைத்தன்மையை உறுதி செய்யும் வகையிலும் வட்டாட்சியர் அலுவலகத்தால் எடுக்கப்பட்டுள்ள இந்த எச்சரிக்கை நடவடிக்கை, சிவகாசி பகுதி பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

