விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே உள்ள ம.ரெட்டியபட்டி சார்பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் நடத்திய அதிரடி சோதனையில், கணக்கில் வராத ₹11,200 ரொக்கம் மற்றும் பல முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
ம.ரெட்டியபட்டி சார்பதிவாளர் அலுவலகத்தில் பொன். பரணிகுமார் என்பவர் சார்பதிவாளராகப் பணியாற்றி வருகிறார். இன்று ஆடிப்பெருக்கு சுபதினம் என்பதால், பத்திரப் பதிவுகளை மேற்கொள்வதற்காக ஏராளமான பொதுமக்கள் அலுவலகத்தில் குவிந்திருந்தனர்.
இந்நிலையில், லஞ்ச ஒழிப்புத் துறை ஆய்வாளர்கள் யாஸ்மின் மும்தாஜ் மற்றும் பூமிநாதன் ஆகியோர் தலைமையிலான போலீஸார், இன்று மாலை சார்பதிவாளர் அலுவலகத்தில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.
இந்தச் சோதனையின்போது, கணக்கில் வராத ₹11,200 ரொக்கப் பணம் மற்றும் முக்கிய ஆவணங்களைப் போலீஸார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக சார்பதிவாளர் பொன். பரணிகுமாரிடம் லஞ்ச ஒழிப்புத் துறையினர் தொடர்ந்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

