ஆடிப்பெருக்கு நன்னாளையொட்டி, விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் சிறப்பு பூஜைகளுடன் 2027-ஆம் ஆண்டிற்கான புதிய காலண்டர் ஆல்பங்கள் வெளியிடப்பட்டு, நாட்காட்டி உற்பத்திப் பணிகள் முறைப்படி தொடங்கப்பட்டுள்ளன.
'குட்டி ஜப்பான்' என்று அழைக்கப்படும் சிவகாசியில் பட்டாசு மற்றும் அச்சுத் தொழில்கள் பிரதானமாக விளங்கி வருகின்றன. இந்நிலையில், ஆடிப்பெருக்கு பண்டிகையை முன்னிட்டு சிவகாசியில் உள்ள நாட்காட்டி தயாரிப்பு நிறுவனங்களில் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டு, வியாபாரிகளுக்காகப் புதிய ரக காலண்டர் ஆல்பங்கள் வெளியிடப்பட்டன.
ஒவ்வொரு ஆண்டும் காலண்டர் வடிவமைப்பில் பல்வேறு புதுமைகள் புகுத்தப்பட்டு வரும் நிலையில், இந்த ஆண்டு மாதத்தின் முதல் நாளிலேயே அந்த மாதத்திற்கான அரசு விடுமுறைகள் மற்றும் வார விடுமுறை நாட்களைப் பயனாளர்கள் எளிதில் அறிந்துகொள்ளும் வகையிலான புதிய வடிவமைப்பு அறிமுகப்படுத்தப்பட்டு பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. மேலும், மென்பட்டினால் (Velvet finish) ஆன கண்கவர் புதிய மாடல் காலண்டர்களும் சந்தைக்கு வந்துள்ளன. வாடிக்கையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்ப ரூ.30 முதல் ரூ.4,000 வரையிலான விலைகளில் எண்ணற்ற வடிவங்களில் இவை தயாரிக்கப்படவுள்ளன.
அதேவேளையில், மேற்காசிய நாடுகளில் நிலவும் சூழல் காரணமாக காகிதக் கூழ் உள்ளிட்ட மூலப்பொருட்களின் விலை அதிகரித்துள்ளது. இதன் காரணமாக, 2027-ஆம் ஆண்டிற்கான காலண்டர்களின் விலை 12 முதல் 15 சதவீதம் வரை உயர்த்தப்பட்டுள்ளதாக உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து சிவகாசியைச் சேர்ந்த காலண்டர் உற்பத்தியாளர் ஜெயசங்கர் கூறுகையில், "அடுத்த ஆண்டில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் பட்சத்தில், வழக்கமான விற்பனையை விட 5 முதல் 8 சதவீதம் வரை விற்பனை கூடும் என எதிர்பார்க்கிறோம்" என்று தெரிவித்தார்.

