விருதுநகர் கலைஞர் நகர் பகுதியில், வீட்டின் குடிநீர் தொட்டியில் தவறி விழுந்த 2 வயது ஆண் குழந்தை நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
விருதுநகர் கலைஞர் நகரைச் சேர்ந்த கட்டிடத் தொழிலாளி செல்வத்தின் 2 வயது குழந்தை விஷ்ணு மித்ரன். செல்வம் தனது குழந்தையைத் தனது அண்ணன் முருகனின் வீட்டில் விட்டுவிட்டு வெளியே நின்றுகொண்டிருந்தார். அப்போது வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த குழந்தை திடீரென மாயமானான். இதனால் அதிர்ச்சியடைந்த செல்வம் அக்கம் பக்கத்தில் தீவிரமாகத் தேடியும் குழந்தை கிடைக்கவில்லை.
பின்னர் மீண்டும் வீட்டிற்குள் சென்று தேடியபோது, அங்குள்ள குடிநீர் தொட்டியில் குழந்தை விழுந்திருக்கலாம் எனச் சந்தேகமடைந்து உள்ளே பார்த்துள்ளார். அப்போது குழந்தை தொட்டிக்குள் நீரில் மூழ்கிய நிலையில் கிடந்தது தெரியவந்தது.
உடனடியாகக் குழந்தையை மீட்டு சிகிச்சைக்காக விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால், குழந்தையைப் பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே மூச்சுத்திணறி உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனர். இச்சம்பவம் குறித்து விருதுநகர் மேற்கு காவல் நிலையப் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

