‘போதையை ஓட ஓட விரட்டுவோம்’ - 4,300-க்கும் மேற்பட்டோர் பங்கேற்ற விழிப்புணர்வு மாரத்தான்!
விருதுநகரில் போதைப்பொருள் பயன்பாட்டிற்கு எதிரான விழிப்புணர்வை பொதுமக்கள் மத்தியில் ஏற்படுத்தும் வகையில், ‘போதையை ஓட ஓட விரட்டுவோம்’ என்ற முழக்கத்துடன் பிரம்மாண்ட மாரத்தான் போட்டி நடைபெற்றது. கே.வி.எஸ். பள்ளி பழைய மாணவர்கள் சங்கம் மற்றும் தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கி ஆகியவை இணைந்து இந்த விழிப்புணர்வு ஓட்டத்தை ஒருங்கிணைத்தன.
விருதுநகர் மாவட்ட அளவில் நடைபெற்ற இப்போட்டியில், சுமார் 4,300 மாணவ, மாணவிகள் மிகுந்த ஆர்வத்துடன் கலந்துகொண்டனர். இப்போட்டியானது ஆண்கள் மற்றும் பெண்களுக்கு எனத் தனித்தனியாக இரு பிரிவுகளின் கீழ் நடத்தப்பட்டது. இதில் ஆண்களுக்கு 6 கிலோமீட்டர் தொலைவும், பெண்களுக்கு 5 கிலோமீட்டர் தொலைவும் இலக்காக நிர்ணயிக்கப்பட்டிருந்தது.
கே.வி.எஸ். ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் தொடங்கிய மாரத்தான் ஓட்டம், நகரின் முக்கிய வீதிகளின் வழியாகச் சென்று மீண்டும் அதே பள்ளி மைதானத்தில் நிறைவடைந்தது.
போட்டியில் முதலிடம் பிடித்த வெற்றியாளர்களுக்கு ரூ. 3,000 ரொக்கப் பரிசும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. அதனைத் தொடர்ந்து, இரண்டாம் இடம் பிடித்த மாணவ, மாணவிகளுக்கு ரூ. 2,000 ரொக்கப் பரிசையும், பாராட்டுச் சான்றிதழ்களையும் விருதுநகர் சட்டமன்ற உறுப்பினர் செல்வம் வழங்கி வாழ்த்துகளைத் தெரிவித்தார்.

