விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் சினிமா பாணியில் கொள்ளை!- காரில் முகமூடி அணிந்து வந்த நான்கு பேர் கொண்ட கும்பல் கொள்ளையடித்து தப்பி ஓட முயன்ற போது அவர்களை பிடிக்க முயன்ற தம்பதியினரை வாளால் வெட்ட முயன்ற அதிர்ச்சி சம்பவமும் அரங்கேறி உள்ளது...
விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் ஐயப்பன் காலனி 5-வது தெருவில் குடியிருப்பவர் அரவிந்த்ராம்( வயது 40 ). இவர் உழவர் சந்தை அருகே அச்சகத்திற்குத் தேவையான பேக்கிங் தொழில் நிறுவனமும், சண்முகம் சாலையில் சூப்பர் மார்க்கெட்டும் நடத்தி வருகிறார்.
அரவிந்த் ராம் நேற்று இரவு தனது மனைவி அபிராமி மற்றும் குழந்தைகளுடன் வீட்டைப் பூட்டி விட்டு வெளியில் சென்றுவிட்டு நள்ளிரவில் மீண்டும் வீடு திரும்பிய போது வீட்டின் முன்பாக ஒரு கார் நின்று கொண்டிருந்தது. காரில் இருந்த நபர்கள் தங்களது செல்போனில் ரீல்ஸ் பார்த்துக் கொண்டிருந்து அரவிந்த் ராம் குடும்பத்தினரைக் கண்டவுடன் காரின் ஹாரன் சத்தத்தை தொடர்ச்சியாக எழுப்பியுள்ளனர்.
இதனால் சந்தேகமடைந்த அரவிந்த் ராம் மற்றும் அவரது மனைவி அபிராமி வீட்டிற்குள் வேகமாக சென்றுள்ளனர். அப்போது வீட்டிலிருந்து நகையுடன் தலையில் துண்டு போட்டுக் கொண்டும் முகமூடி அணிந்தபடியும் தங்க நகைகளை கொள்ளை அடித்தபடி தப்பி ஓடியுள்ளனர். அப்போது அரவிந்த் ராம் அவர்களை விரட்டிச் சென்ற போதும் அவரையும் அவரது குடும்பத்தார்களையும் வாள் மற்றும் அரிவாளால் வெட்ட முயன்று மிரட்டியபடி காரில் தப்பி சென்றுள்ளனர்.
பின்பக்கமாக வீட்டிற்கு சென்ற அரவிந்த் ராம் குடும்பத்தினருக்கு பெரிய அதிர்ச்சி காத்திருந்தது. அதாவது வீட்டினுள்ள்ளிருந்த பீரோவை வீட்டு சமையலறையில் இருந்த தேங்காய் துருவி, உள்ளிட்ட பொருட்களின் உதவியோடு உடைக்கப்பட்டு அதில் வைக்கப்பட்டிருந்த 93- பவுன் தங்க நகையும், ரூபாய் 10 ஆயிரம் பணமும் கொள்ளை போய் இருந்தது தெரிய வந்தது.
சம்பவம் குறித்து தகவல் அறிந்த சிவகாசி நகர் காவல் நிலைய போலீசார்கள் இரவோடு இரவாக விசாரணை மேற்கொண்டு தப்பி ஓடிய கொள்ளையர்களை வலை வீசி தேடி வருகின்றனர். சினிமா பாணியில் நடந்த இந்த கொலை சம்பவம் சிவகாசி வட்டார மக்கள் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

