விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் அடிப்படை வசதி இல்லாமல் இயங்கும் பள்ளியால் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை அரசு பள்ளிக்கு அனுப்ப மறுத்து வருகின்றனர். ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ளது திருவண்ணாமலை கிராமம் வெங்கடேஸ்வராபுரம் பஞ்சாயத்துக்கு உட்பட்ட இக்கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய அரசு ஆரம்பப்பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இப்பள்ளி கட்டிடமானது சுமார் 60 வருடங்களுக்கு முன்பு கட்டப்பட்டது. இந்த பழைய கட்டிடத்தில் மேற்கூரை மற்றும் பக்கவாட்டு சுவர்களில் விரிசல் ஏற்பட்டு மழை பெய்தால் மழை நீர் பள்ளிக்கு உள்ளே வரும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் பள்ளியின் அருகே மழையால் இடிந்த கட்டடத்தை தற்போது வரை சீரமைக்காமல் இருப்பதால் அங்கு படித்த மாணவ - மாணவிகளும் ஒரே கட்டிடத்தில் கல்வி பயில வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. அவ்வாறு இருக்கும் போது மாணவர்களின் நெருக்கடி மற்றும் சேதம் அடைந்த கட்டிடத்தால் தங்கள் குழந்தைகளுக்கு பாதிப்பு ஏற்படும் என்று கருதியை பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை ஊராட்சி ஒன்றிய பள்ளியில் சேர்க்காமல் ஸ்ரீவில்லிபுத்தூர் நகருக்குள் இருக்கும் பள்ளிகளில் சேர்த்து வருகின்றனர். பள்ளி மேற்கூரை பாதிப்படைந்து இருப்பதால் பல சமயங்களில் பள்ளி கண்ட இடத்திற்கு வெளியே மரத்தடியில் வகுப்புகள் நடைபெற்று வருகிறது. இது தொடர்பாக பலமுறை கிராம மக்கள் சார்பில் கோரிக்கை வைத்தும் சீரமைக்கப்படாமல் உள்ளது.குறிப்பாக இந்த பள்ளி கட்டடம் தான் சட்டமன்ற, நாடாளுமன்ற, ஊடக தேர்தல்களில் வாக்குச்சாவடியாக செயல்படுவது குறிப்பிடத்தக்கது. அந்நேரத்தில் மட்டும் ஒயிட் சிமெண்ட் மூலம் விரிசல்கள் மூடப்பட்டு தற்காலிக ஏற்பாடுகள் செய்யப்படுகிறது. மேலும் மாணவ- மாணவிகள் என இரு பாலர் படிக்கும் இப்பள்ளியில் இவர்களுக்கான கழிவறை வசதி கூட இல்லாதது மிகவும் வேதனையானது. இதன் காரணமாக இயற்கை உபாதைகளை கழிக்க பள்ளியில் படிக்கும் குழந்தைகள் சிரமப்படுகின்றனர். ஆகையால் மாவட்ட நிர்வாகம் உடனடியாக தங்கள் பள்ளிக்கு புதிய கட்டிடத்தை நிறுவ வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
செய்திகள்
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் சேதமடைந்துள்ள பள்ளி கட்டிடத்தால் மரத்தடியில் வகுப்பு நடக்கும் அவலம்
The News Outlook
🕒 20 ஜூலை, 2026, 11:16 AM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு

செய்தியைக் கேளுங்கள்
Text-to-Speech
