மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா புதுச்சேரிக்கு வருகை தர உள்ளதை முன்னிட்டு, பாதுகாப்பு நடவடிக்கையாக புதுச்சேரி முழுவதும் டிரோன்கள் மற்றும் ஆளில்லா வான்வழி கருவிகளை பறக்கவிட தடை விதிக்கப்பட்டுள்ளது.
அமித் ஷா இன்று தமிழகம் மற்றும் புதுச்சேரிக்கு 2 நாள் பயணமாக வருகிறார். புதுச்சேரியில் தங்கும் அவர், நாளை கோரிமேடு பகுதியில் நடைபெறும் நிகழ்ச்சியில் புதுச்சேரி காவல்துறைக்கு குடியரசுத் தலைவரின் காவல் வண்ணத்தை வழங்க உள்ளார். இதையடுத்து திருவண்ணாமலைக்கு சென்று கோவிலில் வழிபாடு மேற்கொள்ள இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதையொட்டி புதுச்சேரியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. அமித் ஷா செல்லும் வழித்தடங்கள், அவர் தங்கும் இடம் மற்றும் நிகழ்ச்சி நடைபெறும் பகுதிகளில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
பாதுகாப்பு காரணங்களுக்காக டிரோன்கள் மற்றும் பிற ஆளில்லா வான்வழி சாதனங்களை இயக்குவதற்கு தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டுள்ளது. தடையை மீறி டிரோன்களை பறக்கவிடுவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
மேலும், அமித் ஷாவின் வருகையை முன்னிட்டு புதுச்சேரி விமான நிலையம், நிகழ்ச்சி நடைபெறும் கோரிமேடு பகுதி மற்றும் அவர் தங்கும் இடங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. மத்திய பாதுகாப்பு குழுவினரும் உள்ளூர் போலீசாரும் இணைந்து பாதுகாப்பு பணிகளை ஆய்வு செய்துள்ளனர்.
அமித் ஷாவின் பயணத்தை முன்னிட்டு பொதுமக்கள் மற்றும் டிரோன் இயக்குபவர்கள் பாதுகாப்பு விதிமுறைகளை கடைபிடித்து, போலீசாருக்கு முழுமையாக ஒத்துழைக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

