மிலாடி நபி தினத்தை முன்னிட்டு புதுச்சேரியில் ஆகஸ்ட் 26, 2026 அன்று ஒருநாள் முழுவதும் மதுபான விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதன்படி மதுபானக் கடைகள், பார்கள் உள்ளிட்ட உரிமம் பெற்ற மதுபான விற்பனை நிலையங்கள் அனைத்தும் மூடப்பட்டிருக்க வேண்டும் என கலால்துறை உத்தரவிட்டுள்ளது.
புதுச்சேரி மற்றும் ஏனாம் பிராந்தியங்களில் ஆகஸ்ட் 26-ம் தேதி அனைத்து வகையான மதுபான விற்பனை நிலையங்களும் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில், கேரள எல்லையை ஒட்டியுள்ள மாஹே பிராந்தியத்தில் மிலாது நபி தினத்தை முன்னிட்டு ஆகஸ்ட் 25-ம் தேதியே மதுபான விற்பனைக்கு தடை அமல்படுத்தப்பட்டுள்ளது.
இந்தத் தடை அரசு மதுபானக் கடைகள் மட்டுமின்றி, உரிமம் பெற்ற தனியார் மதுபான விற்பனை நிலையங்கள், சாராயம் மற்றும் கள்ளுக்கடைகள், மொத்த மதுபான விநியோக நிலையங்கள் மற்றும் சுற்றுலா விடுதிகள், உணவகங்களுடன் இணைந்து செயல்படும் பார்களுக்கும் பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தடையை மீறினால் கடும் நடவடிக்கை
மிலாடி நபி தினத்தன்று மதுபான விற்பனை அல்லது மதுபானம் பரிமாறுதல் நடைபெறக்கூடாது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அரசு உத்தரவை மீறி செயல்படும் மதுபானக் கடைகள் மற்றும் உரிமதாரர்கள் மீது சம்பந்தப்பட்ட சட்ட விதிகளின்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மிலாடி நபி தினத்தையொட்டி தமிழகத்தின் பல மாவட்டங்களிலும் மதுபான விற்பனைக்கு ஒருநாள் தடை விதிக்கப்பட்டுள்ளது. உதாரணமாக, தஞ்சாவூர் மாவட்டத்திலும் ஆகஸ்ட் 26-ம் தேதி டாஸ்மாக் கடைகள் மற்றும் மதுபானக் கூடங்கள் மூடப்படுவதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

