விருதுநகர் மாவட்டம் சிவகாசி விஸ்வநத்தம் சாலையில் மாநகராட்சி நூலகத்துடன் கூடிய அறிவுசார் மையம் செயல்பட்டு வருகிறது. இங்கு அரசு போட்டி தேர்வு மற்றும் நுழைவுத் தேர்வுகளுக்கு தயாராகும் மாணவ மாணவியர் பயின்று வருகின்றனர். இந்நிலையில் தவெகவின் சிவகாசி சட்டமன்ற தொகுதி செயற்குழு உறுப்பினர் விக்னேஷ் குமார் இந்த நூலகத்திற்கு சென்று ஆய்வு நடத்தி அங்குள்ள பயிற்றுனர்கள், மாணவ மாணவியருடன் குறைகளை கேட்டறிந்து அதனை வீடியோ பதிவு செய்து "சுற்றி நின்றே ஊரே பார்க்க களம் காண்போம்" என்ற பாடலுடன் இணைத்து ஆய்வு செய்வது போன்ற வீடியோவை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மட்டுமல்லாமல் தவெக சார்ந்த இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரீல்ஸாக வெளியிட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மேலும் சிவகாசி மாநகராட்சி நூலகத்தில் பொதுமக்கள் மற்றும் வாசகர்கள் எதிர்கொண்டு வந்த குறைகள் குறித்து உரிய கவனம் செலுத்தப்பட்டு, சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் எடுத்துரைக்கப்பட்டு தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு குறைகள் தீர்க்கப்பட்டன. வாசகர்களின் வசதி மற்றும் மாணவர்களின் கல்வி நலனை கருத்தில் கொண்டு, நூலகத்தை சிறப்பாக செயல்படுத்த தொடர்ந்து நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். இதை செய்து கொடுத்த அமைச்சர் கீர்த்தனா அவர்களுக்கு நன்றி!!! எனவும் நிர்வாகி விக்னேஷ் குமார் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். கல்வி உள்ளிட்ட அரசு சார்ந்த அலுவலகங்களில் தவெக நிர்வாகிகள் தேவையற்ற ஆய்வு நடத்தக் கூடாது என ஏற்கனவே முதலமைச்சர் விஜய் உத்தரவிட்டிருக்கக்கூடிய நிலையில் முதலமைச்சரின் உத்தரவை மீறி சிவகாசியில் தவெக நிர்வாகி ஒருவர் அரசு நூலகத்தில் ஆய்வு நடத்தி அதனை ரீல்ஸாக வெளியிட்டுள்ளது பேசு பொருளாகியுள்ளது.
அரசியல்
சிவகாசி மாநகராட்சி நூலகத்தில் தவெக நிர்வாகி ஆய்வு? இன்ஸ்டாகிராம் ரீல்ஸால் சர்ச்சை
The News Outlook
🕒 12 ஆக., 2026, 04:57 AM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு

செய்தியைக் கேளுங்கள்
Text-to-Speech
