விருதுநகர் மாவட்டத்தில் ஆய்வு என்ற பெயரில் பட்டாசு ஆலைகள் தொடர்ந்து சஸ்பெண்ட் செய்யப்படுவதால், ஆயிரக்கணக்கான தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாகக் கூறி, விசிக உள்ளிட்ட 7 கட்சிகளின் கூட்டமைப்பு சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.
விசிக, இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி (எம்.கே), இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (எம்.எல்), இந்திய தேசிய லீக், இந்திய புரட்சிகர மார்க்சிஸ்ட் கட்சி (RMPI), ஆதித்தமிழர் பேரவை மற்றும் S.U.C.I. கம்யூனிஸ்ட் ஆகிய 7 அமைப்புகள் இணைந்து இந்த மனுவை வழங்கினர்.
500-க்கும் மேற்பட்ட ஆலைகள் சஸ்பெண்ட்?
மனுவில், விருதுநகர் மாவட்டத்தில் நாக்பூர், DRO மற்றும் மெட்ராஸ் உரிமங்களின் கீழ் சுமார் 1,073 பட்டாசு ஆலைகள் இயங்கி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பட்டாசுத் தொழிலை நேரடியாகவும், மறைமுகமாகவும் நம்பி அச்சுத் தொழில், பட்டாசுப் பெட்டி தயாரிப்பு, ஏஜென்சி மற்றும் சில்லறை விற்பனை உள்ளிட்ட பல்வேறு தொழில்களில் சுமார் 8 லட்சம் பேர் வாழ்வாதாரம் பெற்று வருவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
தற்போது விதிமீறல்களை காரணம் காட்டி 500-க்கும் மேற்பட்ட பட்டாசு ஆலைகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதாக கூறியுள்ள கூட்டமைப்பினர், இதனால் ஏராளமான தொழிலாளர்கள் வேலை இழந்து பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
வேலைவாய்ப்பு இல்லாததால் கடன் தவணைகளை செலுத்த முடியாமலும், குழந்தைகளின் பால் மற்றும் கல்விச் செலவுகளுக்குக்கூட பணம் இல்லாமலும் பல குடும்பங்கள் சிரமப்படுவதாக அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
சிறு தவறுகளுக்கு உடனடி சஸ்பெண்ட் வேண்டாம்
பட்டாசு ஆலைகளில் சிறிய அளவிலான விதிமீறல்கள் கண்டறியப்பட்டால், சம்பந்தப்பட்ட உரிமையாளர்களுக்கு உரிய அறிவுறுத்தல்களை வழங்கி அவற்றை சரிசெய்ய வாய்ப்பு அளிக்க வேண்டும் என 7 கட்சிகளும் கோரிக்கை விடுத்துள்ளன.
தொடர்ந்து விதிமீறல் இருப்பது உறுதி செய்யப்பட்டு ஆலையை சஸ்பெண்ட் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டால், அந்தக் காலகட்டத்தில் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு மாவட்ட நிர்வாகமும் தமிழக அரசும் இணைந்து உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
தொழிலாளர்களுக்கு ESI, PF பாதுகாப்பு
தீபாவளி பண்டிகைக்கு இன்னும் இரண்டு மாதங்களே உள்ள நிலையில், உரிமம் பெற்று விதிமுறைகளுக்கு உட்பட்டு செயல்படும் பட்டாசு ஆலைகளுக்கும் ஆய்வு என்ற பெயரில் தேவையற்ற நெருக்கடி கொடுக்கக்கூடாது என்றும் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், பட்டாசுத் தொழிலாளர்களுக்கு ESI, PF உள்ளிட்ட சட்டப்பூர்வ பாதுகாப்புகளை உறுதி செய்வதுடன், பட்டாசுத் தொழிலாளர் நலவாரியம் மூலம் கூடுதல் நலத்திட்டங்கள் மற்றும் சலுகைகளை அரசு ஏற்படுத்த வேண்டும் எனவும் கூட்டமைப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

