சென்னையில் நடைபெற்ற “வெற்றி தமிழ்நாடு 2026” முதலீட்டாளர்கள் மாநாட்டில் தமிழகத்தின் தொழில் மற்றும் பொருளாதார வளர்ச்சி தொடர்பான பல்வேறு முக்கிய அறிவிப்புகள் வெளியாகின. முதல்-அமைச்சர் விஜய் முன்னிலையில் நடைபெற்ற இந்த மாநாட்டில் பல தொழில் நிறுவனங்களுடன் முதலீட்டு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.
மாநாட்டில் மொத்தம் 97 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளதாக தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா தெரிவித்தார். இதன் மூலம் தமிழகத்தில் ரூ.1 லட்சம் கோடி அளவிலான முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளதாகவும், சுமார் 1,06,998 பேருக்கு வேலைவாய்ப்புகள் உருவாகும் என்றும் அவர் கூறினார்.
தமிழகம் தொழில் முதலீடுகளுக்கு நம்பகமான மாநிலமாக தொடர்ந்து முன்னிலையில் இருப்பதாக அமைச்சர் கீர்த்தனா குறிப்பிட்டார். தொழில் நிறுவனங்கள் தொடங்குவதற்குத் தேவையான உள்கட்டமைப்பு, திறமையான மனிதவளம் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் மாநிலத்தில் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
மேலும், தவெக ஆட்சி அமைந்த முதல் 100 நாட்களில் ரூ.1 லட்சம் கோடி முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளதாக அமைச்சர் கூறினார். தொழில் நிறுவனங்களுக்கான அனுமதிகள் 21 நாட்களுக்குள் வழங்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
தமிழகத்தின் நீண்டகால பொருளாதார வளர்ச்சிக்காக 2036-ம் ஆண்டுக்குள் 1.5 டிரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதாரமாக மாற்றும் இலக்கை முதல்-அமைச்சர் விஜய் நிர்ணயித்துள்ளதாக அமைச்சர் கீர்த்தனா கூறினார்.
அதேபோல், வேலைவாய்ப்புக்காக தமிழக இளைஞர்கள் தங்கள் சொந்த ஊர்களை விட்டு வெளியே செல்ல வேண்டிய நிலை ஏற்படக்கூடாது என்பதே அரசின் முக்கிய நோக்கங்களில் ஒன்று என்றும் அவர் தெரிவித்தார்.
தற்போது மேற்கொள்ளப்படும் முதலீடுகள் அடுத்த 10 ஆண்டுகளுக்கான தமிழகத்தின் தொழில் வளர்ச்சிப் பாதைக்கு அடித்தளமாக அமையும் என்றும், “வெற்றி தமிழ்நாடு 2026” மாநாடு மாநிலத்தின் தொழில் வளர்ச்சியில் முக்கிய மைல்கல்லாக இருக்கும் என்றும் அமைச்சர் கீர்த்தனா கூறினார்.

