வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ளும் வகையில் சென்னையில் மாநகராட்சி சார்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இதற்காக ரூ.10 கோடி நிதி ஒதுக்கீடு செய்து மாநகராட்சி நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
மழைக்காலத்தில் பொதுமக்களுக்கு ஏற்படும் பாதிப்புகளை குறைக்கும் வகையில், நகரின் பல்வேறு பகுதிகளில் சாலைகளை உடனடியாக சீரமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்காக ஒவ்வொரு மண்டலத்திற்கும் ரூ.1 கோடி முதல் ரூ.1.25 கோடி வரை என மொத்தம் ரூ.20 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், பருவமழை தொடர்பான பணிகளை மேற்கொள்வதற்காக கூடுதலாக ஒவ்வொரு வார்டுக்கும் 5 பணியாளர்கள் வீதம் மொத்தம் 1,000 பணியாளர்கள் நியமிக்கப்பட உள்ளனர்.
மழைநீர் தேங்கும் பகுதிகளில் உடனடியாக நீரை வெளியேற்றும் வகையில் அதிக திறன் கொண்ட 150 மோட்டார்கள் மற்றும் டிராக்டர்கள் மூலம் இயக்கப்படும் 600 மோட்டார்களை வாடகைக்கு பயன்படுத்தவும் மாநகராட்சி அனுமதி வழங்கியுள்ளது.
அதேபோல், மின்சாரம் மற்றும் இயந்திரம் சார்ந்த உபகரணங்களை பழுதுபார்ப்பதற்காக ரூ.15 லட்சம் நிதியும் ஒதுக்கப்பட்டுள்ளது. முன்னெச்சரிக்கை பணிகள் முறையாக நடைபெறுகிறதா என்பதை கண்காணிக்க சென்னையில் உள்ள 15 மண்டலங்களுக்கும் நோடல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
வடகிழக்கு பருவமழை காலத்தில் மழைநீர் தேக்கம், போக்குவரத்து பாதிப்பு உள்ளிட்ட பிரச்சினைகளை தவிர்க்கும் நோக்கில் இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

