திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தில் கோலாலம்பூர் செல்ல இருந்த பெண் பயணியிடம் இருந்து ரூ.90 லட்சம் மதிப்பிலான இந்திய மற்றும் வெளிநாட்டு பணம் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் வழுத்தூர் ரமலான் தெருவைச் சேர்ந்த அப்துல் பின் வாஹித் அன்சாரியின் மனைவி தஸ்லிமா பானு (40), ஏர் ஏசியா விமானத்தில் கோலாலம்பூர் செல்வதற்காக திருச்சி விமான நிலையத்திற்கு வந்துள்ளார்.
அப்போது, விமான நிலையத்தில் அவரது உடைமைகளை ஸ்கேன் பிரிவு ஊழியர்கள் சோதனை செய்தனர். இதில், அவரது உடைமைகளில் கணக்கில் காட்டப்படாததாகக் கூறப்படும் இந்திய ரூபாய் 65 லட்சம் மற்றும் வெளிநாட்டு நாணயம் ரூ.25 லட்சம் மதிப்பில் இருப்பது கண்டறியப்பட்டது. மொத்தம் ரூ.90 லட்சம் மதிப்பிலான பணம் இருப்பது தெரியவந்ததையடுத்து, தஸ்லிமா பானுவை சுங்கத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.
இதையடுத்து, பறிமுதல் செய்யப்பட்ட பணம் தொடர்பாக சுங்கத்துறை அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பணம் எங்கிருந்து பெறப்பட்டது, எதற்காக எடுத்துச் செல்லப்பட்டது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் விசாரணை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.
மேலும், இந்த சம்பவம் தொடர்பாக விமான நிலைய போலீஸாரும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

