ஆந்திரப் பிரதேசத்தின் விஜயநகரம் மாவட்டம் போகாபுரத்தில் ரூ.5,640 கோடி செலவில் உருவாக்கப்பட்டுள்ள அல்லூரி சீதாராம ராஜு சர்வதேச விமான நிலையத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று திறந்து வைத்து நாட்டுக்கு அர்ப்பணித்தார். மாநிலத்தின் விமானப் போக்குவரத்து மற்றும் அடிப்படை கட்டமைப்பு வளர்ச்சியில் இது முக்கிய மைல்கல்லாக கருதப்படுகிறது.
இந்த புதிய கிரீன்ஃபீல்டு விமான நிலையம் வட ஆந்திராவின் உள்நாட்டு மற்றும் சர்வதேச விமான சேவைகளை மேம்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. விசாகப்பட்டினம் உள்ளிட்ட முக்கிய நகரங்களின் விமானப் போக்குவரத்து நெரிசலை குறைப்பதோடு, சுற்றுலா, தொழில் முதலீடு மற்றும் சரக்கு போக்குவரத்துக்கும் இது பெரும் ஊக்கமாக அமையும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
விமான நிலையத்திற்கு சுதந்திரப் போராட்ட வீரர் அல்லூரி சீதாராம ராஜு பெயர் சூட்டப்பட்டுள்ளது. முதல் கட்டத்திலேயே ஆண்டுதோறும் பல லட்சம் பயணிகளை கையாளும் வசதியுடன், எதிர்கால வளர்ச்சியை கருத்தில் கொண்டு விரிவாக்க வசதிகளும் இதில் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
ஆந்திரப் பயணத்தின் போது பிரதமர் மோடி, விமான நிலைய திறப்பு விழாவுடன் பல்வேறு வளர்ச்சி திட்டங்களையும் தொடங்கி வைத்தார். இந்த திட்டங்கள் மாநிலத்தின் பொருளாதார முன்னேற்றம் மற்றும் வேலைவாய்ப்பு உருவாக்கத்திற்கு முக்கிய பங்காற்றும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

