விருதுநகர் மாவட்டம் திருச்சுழியில் உள்ள அருள்மிகு துணைமாலை அம்மன் சமேத ஸ்ரீ திருமேனிநாதர் சுவாமி திருக்கோவிலின் சார்பில் நடைபெற்ற பிட்டுத் திருவிழா, குண்டாற்றில் வெகு விமரிசையாக நடைபெற்றது.
சிவபெருமானின் திருவிளையாடல்களில் ஒன்றாகக் கருதப்படும் ‘பிட்டுக்கு மண் சுமந்த படலம்’ நிகழ்வை நினைவுகூரும் வகையில், ஆண்டுதோறும் ஆவணி மாதம் மூல நட்சத்திரத்தில் இந்த விழா நடத்தப்படுகிறது. பிட்டு விற்று வந்த வந்தியம்மை என்ற மூதாட்டிக்கு உதவுவதற்காக மனித உருவில் வந்த சிவபெருமான், அவர் வழங்கிய பிட்டை கூலியாகப் பெற்றுக்கொண்டு ஆற்றங்கரையில் வேலை செய்யச் சென்றதாக ஐதீகம்.
பிட்டு சாப்பிட்ட மயக்கத்தில் மரத்தடியில் சிவபெருமான் உறங்கியதாகவும், அப்போது பாண்டிய மன்னன் அவரை பிரம்பால் அடித்ததாகவும் கூறப்படும் திருவிளையாடலை நினைவுபடுத்தும் விதமாக இந்த விழா ஆண்டுதோறும் சிறப்பாக நடைபெறுகிறது.
அதன்படி, திருச்சுழி குண்டாற்றில் நடைபெற்ற பிட்டுத் திருவிழாவில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை தரிசனம் செய்தனர். விழாவில் பங்கேற்ற பக்தர்களுக்கு பிட்டு பிரசாதமாக வழங்கப்பட்டது.
தொடர்ந்து, சுவாமி மற்றும் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். திருச்சுழி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி, அம்மனை தரிசனம் செய்து வழிபட்டனர்.

