திருச்சி மாவட்டம் சமயபுரம் மாரியம்மன் கோவில் நிர்வாகத்துக்குச் சொந்தமான விடுதியில் தற்காலிக பாதுகாப்பு ஊழியராக பணியாற்றி வந்த தமிழ்ச்செல்வன் (30), 15 வயது சிறுமியிடம் தவறாக நடந்து கொண்டதாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.
மருதூர் மேலத்தெருவைச் சேர்ந்த தமிழ்ச்செல்வன், கோவில் விடுதியில் தங்கும் பக்தர்களிடம் அலைபேசி எண்களைப் பெறுவதை வழக்கமாகக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த குடும்பத்தினர் கோவில் விடுதியில் தங்கியிருந்தபோது, அங்கிருந்த 15 வயது நர்சிங் மாணவியிடம் தமிழ்ச்செல்வன் தனது அலைபேசி எண்ணை கொடுத்து, அவரது எண்ணையும் பெற்றதாக கூறப்படுகிறது.
இதையடுத்து சிறுமியுடன் தொடர்ந்து பேசி வந்ததாகவும், பின்னர் அவரை சமயபுரத்திற்கு வரவழைத்து தனியார் விடுதியில் தங்க வைத்து பாலியல் ரீதியாக தவறாக நடந்து கொண்டதாகவும் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் சிறுமியின் பெற்றோருக்கு தெரியவந்ததைத் தொடர்ந்து, லால்குடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி தமிழ்ச்செல்வனை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
கோவில் நிர்வாகத்துக்குச் சொந்தமான விடுதியில் பணியாற்றும் ஊழியர்களின் நடவடிக்கைகள் மற்றும் அங்கு தங்கும் பக்தர்களின் பாதுகாப்பு குறித்து உரிய கண்காணிப்பு மேற்கொள்ள வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

