விருதுநகர் காய்கறி சந்தையில் பெரிய வெங்காயம் மற்றும் கத்தரிக்காய் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால் பொதுமக்கள் கவலை அடைந்துள்ளனர்.
கடந்த வாரம் வரை கிலோ ரூ.50-க்கு விற்பனை செய்யப்பட்ட பெரிய வெங்காயம், கடந்த சில நாட்களாக விலை அதிகரித்து தற்போது கிலோ ரூ.65-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால் அன்றாட சமையலுக்குத் தேவையான வெங்காயத்தை வாங்கும் பொதுமக்களுக்கு கூடுதல் செலவு ஏற்பட்டுள்ளது.
இதேபோல் கத்தரிக்காய் விலையும் உயர்ந்துள்ளது. தற்போது சந்தையில் கத்தரிக்காய் கிலோ ரூ.70 முதல் ரூ.90 வரை விற்பனை செய்யப்படுகிறது.
தக்காளி விலை சரிவு
ஒருபுறம் வெங்காயம் மற்றும் கத்தரிக்காய் விலை உயர்ந்துள்ள நிலையில், தக்காளி விலை சரிந்துள்ளது.
விருதுநகர் சந்தையில் மொத்த விற்பனையில் தக்காளி கிலோ ரூ.17-க்கும், சில்லறை விற்பனையில் கிலோ ரூ.20-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
காய்கறிகளின் விலை தொடர்ந்து ஏற்ற இறக்கமாக இருந்து வரும் நிலையில், அத்தியாவசிய காய்கறிகளின் விலை உயர்வு குடும்ப பட்ஜெட்டில் கூடுதல் சுமையை ஏற்படுத்துவதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

