பரந்தூர் விமான நிலையத் திட்டம் கைவிடப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளதற்கு பாமக சார்பில் நன்றி தெரிவிப்பதாக, அக்கட்சியின் மாநில பொருளாளர் கவிஞர் திலகபாமா தெரிவித்துள்ளார்.
விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் செய்தியாளர்களை சந்தித்த அவர், பரந்தூர் விமான நிலையத் திட்டம் கடந்த 2022-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் அறிவிக்கப்பட்டதாக தெரிவித்தார். இந்தத் திட்டத்தால் பரந்தூர் மற்றும் சுற்றுவட்டாரத்தில் உள்ள 13 கிராமங்களின் விவசாய நிலங்கள் மற்றும் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் எனக்கூறி அப்பகுதி மக்கள் தொடர்ந்து போராட்டங்களில் ஈடுபட்டு வந்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.
கிராமம் கிராமமாக ஆய்வு
இதுதொடர்பாக 2025-ம் ஆண்டு காஞ்சிபுரத்தில் பொதுமக்களிடம் கருத்துக்கேட்புக் கூட்டம் நடைபெற்றதாகவும், இதில் பரந்தூர் சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த 13 கிராம மக்கள் பங்கேற்று தங்களது விவசாய நிலங்களையும் வாழ்வாதாரத்தையும் பாதுகாக்க வேண்டும் என வலியுறுத்தியதாகவும் திலகபாமா கூறினார்.
அதன் தொடர்ச்சியாக, அப்பகுதி மக்களின் பிரச்சினைகளை நேரில் ஆய்வு செய்ய 7 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டதாகவும், அந்தக் குழுவில் தானும் இடம்பெற்றிருந்ததாகவும் தெரிவித்தார்.
குழுவினர் கிராமம் கிராமமாக சென்று பொதுமக்களை சந்தித்து, விவசாயம், வாழ்வாதாரம் மற்றும் நிலம் கையகப்படுத்தப்படுவதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்து அறிக்கை தயாரித்து கட்சித் தலைமையிடம் சமர்ப்பித்ததாகவும் அவர் தெரிவித்தார்.
போராட்டத்திற்கு வெற்றி என பாமக கருத்து
நீண்டகாலமாக நடைபெற்ற போராட்டத்தை பரந்தூர் விமான நிலைய எதிர்ப்புக் குழுத் தலைவர் சுப்பிரமணி மற்றும் செயலாளர் கதிரேசன் ஆகியோர் முன்னெடுத்ததாகவும், பொதுமக்களின் ஆதரவுடன் இந்தப் போராட்டம் வெற்றி பெற்றுள்ளதாகவும் பாமக தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
போராட்டத்திற்கு வழிகாட்டுதல் மற்றும் ஆதரவு வழங்கிய ராமதாஸ், அன்புமணி ராமதாஸ் மற்றும் பாமக தலைமைக்கு அப்பகுதி மக்கள் சார்பில் நன்றி தெரிவிக்கப்பட்டுள்ளதாக திலகபாமா கூறினார்.
“மக்களுக்கு உணவளிக்கும் விவசாய நிலங்களைப் பாதுகாப்பது எங்களது கடமை. பரந்தூர் விமான நிலையத் திட்டம் நிறுத்தப்பட்டிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது” என்றும் அவர் தெரிவித்தார்.
மாற்று இடத்தில் விமான நிலையம் அமைக்க வலியுறுத்தல்
அதேநேரத்தில், தொழில் வளர்ச்சி மற்றும் தமிழ்நாட்டின் எதிர்கால தேவைகளை கருத்தில் கொண்டு மாற்று இடத்தை தேர்வு செய்து புதிய விமான நிலையம் அமைப்பதற்கான நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும் என்றும் பாமக சார்பில் வலியுறுத்தினார்.
மேலும், கடந்த திமுக ஆட்சிக் காலத்தில் பரந்தூர் விமான நிலையத் திட்டத்திற்கு எதிராக போராடிய மக்கள் மீது 144 தடை உத்தரவு உள்ளிட்ட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதாகக் கூறிய அவர், அந்த நடவடிக்கைகள் தொடர்பாக தமிழக அரசு உரிய முடிவெடுத்து, மக்களுக்கும் அவர்களின் நிலங்களுக்கும் நன்மை ஏற்படும் வகையில் செயல்பட வேண்டும் என்றும் தெரிவித்தார்.
பேட்டி: கவிஞர் திலகபாமா – மாநில பொருளாளர், பாமக

