விருதுநகர் மாவட்டம் திருச்சுழியில் நடைபெற்ற தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் 24வது மாவட்ட மாநாட்டில், விவசாயிகள் நலன் சார்ந்த பல்வேறு முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
திருச்சுழி நகர்ப்பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற மாநாட்டிற்கு மாவட்டத் தலைவர் விஜயமுருகன் தலைமை வகித்தார். முன்னதாக மாநாட்டையொட்டி சங்கத்தின் கொடி ஏற்றப்பட்டு, செங்கொடிக்கு வீர வணக்கம் செலுத்தப்பட்டது.
இதனைத் தொடர்ந்து தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் ரவீந்திரன் மாநாட்டை தொடங்கி வைத்தார். மாவட்டச் செயலாளர் முருகன் சங்கத்தின் வேலை அறிக்கையை தாக்கல் செய்தார். மாநில பொதுச் செயலாளர் சாமி நடராஜன் மாநாட்டின் நிறைவுரையாற்றினார்.
மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட முக்கிய தீர்மானங்கள்
விவசாயிகள் உற்பத்தி செய்யும் பொருட்களுக்கு, உற்பத்திச் செலவுக்கு ஏற்ப எம்.எஸ். சுவாமிநாதன் குழு பரிந்துரைத்த C2+50 சதவீத அடிப்படையில் லாபகரமான விலை வழங்கும் சட்டத்தை உருவாக்க வேண்டும் என மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தப்பட்டது.
மேலும், காவிரி–வைகை–குண்டாறு இணைப்புத் திட்டத்திற்கு நடப்பு சட்டமன்ற கூட்டத்தொடரிலேயே தேவையான நிதியை ஒதுக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அச்சங்கோவில்–பம்பையாறு இணைந்த அழகர் அணைத் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்றும், உரம் தயாரிக்கும் தொழிற்சாலைகளை அரசே ஏற்று நடத்த வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.
புதிய மின்சார சட்டத்தை ரத்து செய்ய வேண்டும், காட்டுப்பன்றிகளால் விவசாயிகளுக்கு ஏற்படும் பாதிப்புகளைத் தடுக்க கிராம அளவில் குழுக்கள் அமைத்து நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளும் முன்வைக்கப்பட்டன.
மேலும், மாவட்டத்தில் உள்ள அனைத்து கண்மாய்களையும் முறையாக தூர்வார வேண்டும் என்றும், தேர்தல் வாக்குறுதியில் தெரிவித்தபடி விவசாயிகள் பெற்றுள்ள கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும் மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மாநாட்டில் விருதுநகர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பெண்கள் உள்ளிட்ட நூற்றுக்கணக்கான விவசாயிகள் மற்றும் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

