விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் (விசிக) நிர்வாகிகள் ரூ.1 லட்சம் மாமூல் கேட்டு மிரட்டுவதாகவும், மாமூல் தர மறுத்ததால் வியாபாரத்தை முடக்கும் நோக்கில் கடைகளில் முட்செடிகளை வீசியும், மது பாட்டில்களை உடைத்துப் போட்டும் அராஜகத்தில் ஈடுபட்டதாக மீன் வியாபாரிகள் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர் சிங்கம்மாள்புரம் பகுதியைச் சேர்ந்த குருவையா, ராஜபாண்டி, சத்தியமூர்த்தி, ஜான் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட நபர்கள், உழவர் சந்தை அருகே கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக மீன் வியாபாரம் செய்து வருகின்றனர். இந்நிலையில், கடந்த சனிக்கிழமையன்று அங்கு வந்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் நிர்வாகிகள் சிலர், கடைகளைத் தொடர்ந்து நடத்த வேண்டுமானால் தங்களுக்கு ரூ.1 லட்சம் மாமூல் தர வேண்டும் என்றும், இல்லையென்றால் வியாபாரம் செய்ய விடமாட்டோம் என்றும் மிரட்டல் விடுத்ததாகக் கூறப்படுகிறது.
வியாபாரிகள் மாமூல் தர மறுத்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை இரவு விசிக மாவட்டச் செயலாளர் 'பல்க்' ராஜா தலைமையிலான 10 பேர் கொண்ட கும்பல், வியாபாரம் நடைபெறும் இடம் மற்றும் தள்ளுவண்டிகளில் முட்செடிகளை வெட்டிப் போட்டும், பீர் பாட்டில்களை உடைத்துப் போட்டும் வியாபாரத்தைத் தடுத்து நிறுத்தும் நோக்கில் செயல்பட்டுள்ளது. இந்தக் கடைகளை முடக்கும் சதிச் செயல் தொடர்பான சிசிடிவி காட்சிகளை ஆதாரமாகச் சேகரித்த வியாபாரிகள், ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் காவல் நிலையத்தில் மனு அளித்தனர்.
இது குறித்துப் பாதிக்கப்பட்ட வியாபாரிகள் கூறுகையில், "மாமூல் கேட்டு மிரட்டியது குறித்துப் புகார் அளிக்கக் காவல் நிலையம் சென்றபோது, அங்கு வந்த விசிக மாவட்டச் செயலாளர் 'பல்க்' ராஜா எங்களைப் பார்த்து, ' நீங்கள் புகார் அளித்தால், மீன் மார்க்கெட்டிற்கு வரும் பெண்களிடம் தவறாக நடந்து கொள்வதாக உங்கள் மீது வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் பொய் வழக்குப்பதிவு செய்ய வைப்பேன்' எனப் பகிரங்கமாக மிரட்டினார்" என்று தெரிவித்தனர். இச்சம்பவம் குறித்து ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் காவல் நிலையப் போலீஸார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

