மத்திய அரசு நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்துள்ள வி.பி.எஸ்.ஏ. (VPSA) மசோதாவை உடனடியாகத் திரும்பப் பெற வலியுறுத்துவது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து, மூட்டா (MUTA) கல்லூரி ஆசிரியர்கள் கூட்டமைப்பு சார்பில் விருதுநகரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
விருதுநகர் இந்து நாடார் செந்தில்குமார நாடார் கல்லூரி வளாகத்தின் முன்பாக நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு, மூட்டா அமைப்பின் கிளைத் தலைவர் பேராசிரியர் தேவி தலைமை தாங்கினார். இதில் 40-க்கும் மேற்பட்ட கல்லூரிப் பேராசிரியர்கள் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்று, மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராகக் கண்டன முழக்கங்களை எழுப்பினர்.
முக்கியக் கோரிக்கைகள்:
மாநில உரிமைகளைப் பறிக்கும் வகையிலும், பொதுக் கல்வி முறையைப் பாதிக்கும் வகையிலும் அமைந்துள்ள வி.பி.எஸ்.ஏ. மசோதாவை மத்திய அரசு உடனடியாகக் கைவிட வேண்டும்; மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு 8-வது ஊதியக் குழுவை அமைக்க வேண்டும்; பழைய ஓய்வூதியத் திட்டத்தை (OPS) மீண்டும் அமல்படுத்த வேண்டும்; நீட் (NEET), சியுஇடி (CUET) போன்ற மையப்படுத்தப்பட்ட நுழைவுத் தேர்வுகளை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்டக் கோரிக்கைகள் இந்த ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.
மேலும், தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணை எண் 5-ன் படி, அரசுக் கல்லூரி ஆசிரியர்களுக்கு வழங்கப்படுவதைப் போல, அரசு உதவிபெறும் கல்லூரி ஆசிரியர்களுக்கும் இணைப் பேராசிரியர் பதவி உயர்வு உள்ளிட்ட அனைத்து பணி மேம்பாடுகளையும் (CAS) தாமதமின்றி வழங்க வேண்டும் என்றும் பேராசிரியர்கள் கோரிக்கை விடுத்தனர்.

