மத்திய அரசின் 'பிரதம மந்திரி ஷ்ரம் யோகி மாந்தன்' (PM-SYM) ஓய்வூதியத் திட்டத்தின்கீழ், சுற்றுலா மற்றும் அதனுடன் தொடர்புடைய துறைகளில் பணிபுரியும் தகுதியுடைய அமைப்புசாரா தொழிலாளர்கள் பதிவுசெய்து பயன்பெறலாம் என விருதுநகர் மாவட்ட ஆட்சியர் சுகபுத்ரா தெரிவித்துள்ளார்.
மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தால் செயல்படுத்தப்பட்டு வரும் இத்திட்டம், அமைப்புசாரா தொழிலாளர்களின் சமூகப் பாதுகாப்பையும் பொருளாதார நிலைத்தன்மையையும் உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்டது. 18 முதல் 40 வயது வரையிலான அமைப்புசாரா தொழிலாளர்கள் இத்திட்டத்தில் இணையத் தகுதியுடையவர்கள் ஆவர்.
பங்களிப்பு அடிப்படையிலான இத்திட்டத்தில், பயனாளிகள் செலுத்தும் நிர்ணயிக்கப்பட்ட மாதாந்திர சந்தா தொகைக்கு நிகரான தொகையை மத்திய அரசும் தனது பங்களிப்பாகச் செலுத்தும். இத்திட்டத்தின் கீழ் பதிவு செய்யும் தொழிலாளர்களுக்கு, 60 வயது நிறைவடைந்த பிறகு மாதந்தோறும் ரூ.3,000 உறுதியான ஓய்வூதியமாக வழங்கப்படும்.
யாரெல்லாம் பயனடையலாம்?
சுற்றுலா வழிகாட்டிகள் (Tourist Guides), சுற்றுலா ஒருங்கிணைப்பாளர்கள் (Facilitators), சுற்றுலா வாகன ஓட்டுநர்கள், விடுதி மற்றும் விருந்தோம்பல் துறைப் பணியாளர்கள், தூய்மைப் பணியாளர்கள், கைவினைக் கலைஞர்கள், தெருவோர வியாபாரிகள், உணவகப் பணியாளர்கள் மற்றும் சுற்றுலாத் துறையோடு தொடர்புடைய பிற சேவை வழங்குநர்கள் இத்திட்டத்தின் கீழ் பயனடையத் தகுதியுடையவர்கள் ஆவர்.
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியுடைய தொழிலாளர்கள் தங்களது ஆதார் அட்டை, சேமிப்பு வங்கிக் கணக்குப் புத்தகம் மற்றும் கைபேசி எண்ணுடன் அருகிலுள்ள பொதுச் சேவை மையங்களை (Common Service Centre - CSC) அணுகி பதிவு செய்துகொள்ளலாம்.
மாவாட்டத்திலுள்ள சுற்றுலாச் சங்கங்கள், விடுதி உரிமையாளர்கள், பயண முகவர்கள் மற்றும் சுற்றுலா ஏற்பாட்டாளர்கள், தங்களது துறையைச் சார்ந்த தொழிலாளர்களுக்கு இத்திட்டம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி, அவர்கள் பதிவு செய்யத் தேவையான ஒத்துழைப்பை வழங்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இத்திட்டம் தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு, ‘சுற்றுலா அலுவலர், அறை எண்: 522, 5-வது தளம், புதிய மாவட்ட ஆட்சியரகம், விருதுநகர்’ என்ற முகவரியிலோ அல்லது 7397715688 என்ற கைபேசி எண்ணிலோ தொடர்புகொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

