விருதுநகரில் சலூன் கடைக்குள் புகுந்து அதன் உரிமையாளரை இருவர் கொடூரமாக தாக்கும் அதிர்ச்சியூட்டும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி, அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விருதுநகர் பாண்டியன் நகரைச் சேர்ந்த வீரபாண்டி என்பவர், அங்குள்ள கே.கே.எஸ்.எஸ்.என் நகர் பகுதியில் சலூன் கடை நடத்தி வருகிறார். இவருக்கும் சிவகாசியைச் சேர்ந்த ராஜேஸ்வரி என்பவருக்கும் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமாகி, 6 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில், கணவன்-மனைவி இடையே கடந்த சில நாட்களாக அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது. இதன் ஒருபகுதியாக, வீரபாண்டி தனது மனைவி ராஜேஸ்வரியை தாக்கியதாகவும், இதனால் காயமடைந்த அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்ததாகவும் தெரிகிறது.
இச்சம்பவம் குறித்து அறிந்த ராஜேஸ்வரியின் சகோதரர்களான பாலமுருகன் மற்றும் மாரிச்செல்வம் ஆகிய இருவரும், வீரபாண்டியின் சலூன் கடைக்குள் அத்துமீறி நுழைந்துள்ளனர். அங்கு வேலை செய்துகொண்டிருந்த வீரபாண்டியை அவர்கள் இருவரும் சரமாரியாகத் தாக்கியதோடு, கட்டையாலும் கடுமையாக அடித்து உதைத்துக் கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.
மேலும், ஆத்திரத்தில் சலூன் கடையின் கண்ணாடிகளை அடித்து நொறுக்கி சேதப்படுத்திய அவர்கள், "தேவைப்பட்டால் காவல் நிலையத்தில் புகார் அளித்துக் கொள்" என சவால் விடுத்துச் சென்றுள்ளனர். இந்த வன்முறைச் சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் தற்போது சமூக ஊடகங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இச்சம்பவம் தொடர்பாகப் பாதிக்கப்பட்ட வீரபாண்டி விருதுநகர் ஊரக காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அவரது புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

